சென்னை உட்பட தமிழகத்தின் 24 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் கடந்த ஆண்டு(2018) பருவமழை காலத்தில் பெய்த மழையளவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஆண்டில் சராசரி மழை அளவை விட 14 விழுக்காடு குறைவாகவே தமிழகத்தில் மழை பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் அதிக மழைப்பொழிவைத் தரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் 24 விழுக்காடு குறைவான மழை பெய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

“கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 38 வட்டாரங்கள் பற்றாக்குறை மற்றும் அதிக பற்றாக்குறை என்ற அளவில் மழைப்பொழிவைப் பெற்றுள்ளன. அங்கு நிலத்தடி நீர் குறைந்திருப்பதால் கோடைக் காலத்தில் நீரியல் வறட்சி ஏற்படும். எனவே, இந்த 38 வட்டாரங்களும் வறட்சி வட்டாரங்களாக அறிவிக்கப்படுகின்றன.

அதேபோல, குறைந்தளவு மழைப்பொழிவைப் பெற்றுள்ள சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன.” இவ்வாறு இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.