திருப்பதி ஏழுமலையான தரிசனத்திற்குச் செல்வோரை தரிசனம் சரியாகக் கிடைத்ததா? என்று கேள்வி எழுப்பவரைவிட, லட்டு எங்கே? என்ற கேள்விதான் அதிகம் கேட்கப்படும். அந்தவகையில் இனி மதுரை மீனாட்சியைப் பார்க்க செல்வோரையும் லட்டு எங்கே என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கபடலாம்.

வருகின்ற தீபாவளி முதல் மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டை பிரசாதமாக வழங்க கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் கரு.முத்துகண்ணன் ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.

உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை தேர்வு செய்து மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் கோவிலின் சிறப்பு பல மடங்கு அதிகரித்துவருகிறது. திருப்பதியைபோல மதுரை கோவிலுக்கு வருவோருக்கு பிரசாதமாக லட்டு வழங்க வேண்டுமென பக்தர்கள் தரப்பில் நெடுநாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்றுதான் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.