மகா சிவராத்திரி அன்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கையில் பிடிக்க முடியாது என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே! நாட்டின் மூலைமுடுக்குகளிலிருந்து வந்த லட்சக்கணக்கான மக்கள் சத்குருவின் யோகா மையத்தில் மகா சிவராத்திரியை ஆடல் பாடலுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் நாட்டின் முக்கிய தலைவர்கள் யாரவது அதில் கலந்துகொள்வதும் சம்பிரதாயமாகிவிட்டது.

அதன்படி கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவை இந்த ஆண்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தொடங்கி வைத்தார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா நேற்று மாலை தொடங்கி, சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் விடிய விடிய நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு பஞ்சபூத ஆராதனையில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய ‘டெத்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய அவர், “யோகக் கலைக்கு மதம், மொழி, இன வேறுபாடுகள் இல்லை என்றும் அது ஒரு அறிவியல் செயல்பாடு மற்றும் மக்களை நல்வழிப்படுத்தவும் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவும் சத்குருவைப் போன்றவர்கள் தேவைப்படுவதாகவும் சத்குருவை புகழ்ந்து பேசியுள்ளார்.

அதற்கடுத்து பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ், “நம்முள் இருக்கும் அனைத்துத் தடைகளையும் உடைப்பதற்கு இந்த இரவு உறுதுணையாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

நிகழ்வில் திரைப்படப் பின்னணிப் பாடகர்களின் பாடல்கள், லெபனான் நாட்டு கலைஞர்களின் இசை நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றன. ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களின் களரி, தேவார இசைப் பாடல், கிராமியப் பாடல்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்றன.