குளிரென்பதும் வன்முறைதான்

 

Girl Sleeping | Works of Art | RA Collection | Royal Academy of Artsமழையிலும்

மார்கழியிலும்

உன் சதையை இழுத்து போர்த்திக்கொண்டேன்

 

போர்வைக்குள்

நாம் தீமூட்டி குளிர்காய்ந்த ஓர் நள்ளிரவில்

அம்மா

அப்பாவின் பூச்சூடிய புகைப்படத்தை

கழற்றி

கட்டி

அவன் நெஞ்சுள் புதைந்து

அழுதுகொண்டிருந்தாள்

 

பின்னிரவில்

மூத்திரம் போவதற்காய் எழுந்த நான்

கண்களை கசக்கிக்கொண்டே

கால்கள் தடுமாற பார்க்கிறேன்

அப்பாவின் பெரிய கைச்சட்டைகள்

அம்மாவை அணைத்துக்கொண்டிருந்தன

அவள் அவனுள் உறங்கிக்கொண்டிருந்தாள்

 

நான் மூத்திரம் போய்வந்து

அவள்

கவலைகளை

போர்த்திப்படுத்தேன்.

 

மனிதாபிமானிகள்

 

நடுரோட்டில் அடிபட்டு

இறந்துகிடந்த நாயை

இன்னுமொருமுறை

யாரும்

ஏற்றி நசுக்காமல்

ஸ்டியரிங்கை வளைத்து

விலகிப்போனார்கள்

இறந்த அந்நாய்

இன்னும்

ஒரே ஒருமுறை

தலைதூக்கி

அதைப்பார்த்து

குறுநகைத்துவிட்டு

மீண்டும்

சிரம் சாய்த்தது சாலையில்.

 

சித்திரை

 

Dry Tree, Painting by Balasubramanian S | Artmajeurமுற்றத்தில்

நிழலீன்ற வீட்டுக் குடையை

நாங்கள் தூலி கட்டியாடிய தாய் மடியை

போகவர தொந்தரவென

துடிக்கத்துடிக்க வெட்டி சாய்த்தார் அப்பா

தகிக்கும்வெயில்

தவிக்கும் வீடு

எவ்வளவு கெஞ்சியும்

காற்று வந்து யாரிடமும் பேச மறுக்கிறது

கவலையில் கடைக்குப்போய்

குளிர்சாதனப்பெட்டி வாங்கிவந்து

வீட்டிற்கு மாட்டினார்

 

விறகான வேப்பம்பிள்ளை

வெயிலில் வியர்த்தழுத வீடு.