முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என மாற்றியமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் வரைவு மசோதாவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. அதில், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் இந்த  மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இந்த புதிய திருத்தத்தின்படி, எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வுடன் நாடு முழுவதும் நெக்ஸ்ட் எனப்படும் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் என்ற பெயரில் பொதுவான தேர்வாக நடத்தப்படும் என்றும் அந்த தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் சேர தனி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற விதிமுறை நீடிக்கும். டி.எம்., எம்.சி.எச் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வும் நீடிக்கும்.  இதேபோல, எம்.பி.பி.எஸ். முடித்த பிறகு, மருத்துவராக தொழில் செய்வதற்கான உரிமம் பெற இனி எந்த தேர்வும் எழுத வேண்டியது இல்லை.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.