நேற்று சென்னை சென்ட்ரலில் 3 வயது ஆண் குழந்தையை கடத்திச் சென்ற நபரின் சி.சி.டி.வி காணொளிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவான காணொளியில் உறங்கிக்கொண்டிருந்த தன் பெற்றோரின் அருகே சுற்றிவரும் சிவப்பு நிற உடை அணிந்துள்ள அந்தக் குழந்தையும் அந்தக் குழந்தையை யாரேனும் தேடுகிறார்களா என்ற நோட்டமிடும் தொப்பி அணிந்த ஒரு நபரும் பதிவாகியுள்ளனர். இன்னொரு காணொ

ளியில் தொப்பி அணிந்த அந்த நபர் சிவப்பு நிற உடையணிந்த அந்தக் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு செல்லும் காட்சி சென்னை பூங்கா ரயில் நிலையத்திற்குள் நுழைவது பதிவாகியுள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் தாம்பரம் ரயில் நிலைய காணொளிகளை ஆய்வு செய்தனர்; தாம்பரம் ரயில் நிலையத்தில் பதிவாகியுள்ள காணொயில் கடந்தப்பட்ட குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அந்த நபர் தாம்பரம் ரயில் நிலையத்தில் நடந்துவரும் காட்சியும் பதிவாகியுள்ளார்.

நேற்று (15-07-2019) நள்ளிரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த ஒடிசாவைச் சேர்ந்த தம்பதியின் 3 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. அந்த தம்பதி 2 மணிக்கு எழுந்து பார்த்தபோது குழந்தை காணமால் போயிருப்பதைக் கண்டு அங்கு சுற்றுமுற்றும் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கண்ணீருடன் சென்ட்ரல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் நபரங்பூரைச் சேர்ந்த ராம்சிங் மற்றும் அவரது மனைவி நீலாவதி ஆகியோர் சென்னை புரசைவாக்கத்தில் கட்டப்பட்டுவரும் காவலர் குடியிருப்பில் கட்டடத் தொழிலாளர்களாக பணியாற்றிவருகின்றனர். பணி முடிந்து 7 மணிக்கு மேல் உறங்குவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளனர். அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. 2 மணிக்கு எழுந்து குழந்தை கடத்தப்பட்டிருப்பதை அறிந்த அத்தம்பதியினர் 2:30 மணிக்கு காவல்துறையினரிடம் புகாரளித்தனர். மிகவும் கண்காணிப்பிற்கு உட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இதுபோல நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.