ஒருநாள் விடுமுறையும் மூன்று நாள் துக்கமும் எனத் தனது மாநிலத்தின் இலக்கிய அடையாளமாகத் திகழ்ந்த  கிரிஷ் கர்னாடின் மரணச் செய்தியைச் சொல்லியிருக்கிறது கர்நாடக மாநிலம். தனது 81 – வயதில் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகரில் மரணம் அடைந்துள்ள கிரிஷ் கர்னாடின் தாய்மொழி கன்னடம் என்றாலும் அவர் பிறந்த ஊர் (1938) மந்தெரன் இப்போதுள்ள மகாராட்டிர மாநிலத்திற்குள் இருக்கிறது. ஆங்கில இலக்கியப்படிப்பிற்காக இங்கிலாந்தின் லண்டன் சென்றவர் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பதிப்பகத்தின் பணிக்காகச் சென்னையில் ஏழாண்டுகள் (1963-1970) வாழ்ந்தவர். அந்தக் காலகட்டத்தில் சென்னையில் தீவிரமாகச் செயல்பட்ட மெட்ராஸ் ப்ளேயர் என்ற நாடகக் குழுவோடு இயங்கியவர்.  அந்த உறவே அவரை முக்கியமான நாடக எழுத்தாளராக ஆக்கியது என்று கூடச் சொல்லலாம்.

கர்னாடின் பெயரை நிகழ்கால இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசியலுக்காக வாதிட்ட செயல்பாட்டாளர், இந்திய மொழிச் சினிமாக்கள் பலவற்றில் நடித்த திரைப்படக் குணச்சித்திர நடிகர், நாடக எழுத்தாளர், நாடக இயக்குநர் எனப் பன்முக ஆளுமையாகப் பதிவுசெய்யும் என்பதற்கான காரணங்கள் பல உண்டு. இந்திய அளவில் இலக்கியத்திற்கென வழங்கப்படும் ஞானபீட விருதையும் (1998) ஆளுமைத் திறன்களுக்காக மத்திய அரசு வழங்கும் பத்மஸ்ரீ(1974), பத்மபூஷன்(1992), போன்ற விருதுகளைப் பெற்றவர். இவ்விருதுகள் அல்லாமல் இந்திய அளவில் வழங்கப்படும் விருதான காளிதாச சம்மான் விருதையும்  (1998 ) கன்னட மொழிக்காக சாகித்திய அகாடெமி விருது(1994), சங்கீத் நாடக அகாடெமி விருது(1972) , கன்னட சாகித்திய பரிஷத் விருது (1992) எனப் பல விருதுகளைப் பெற்றவர்.

கலை, இலக்கியத்தளங்களில் பலவாறாகத் தன்னை வெளிப்படுத்திய முதன்மை அடையாளம் நாடகக்காரர் என்பதே. மனிதர்களுக்குள் இருக்கும் இரட்டை நிலையை – மனம், உடல் என்ற இரட்டைநிலையைக் குறித்த விசாரணைகளை முன்னெடுக்கும் அவரது நாடகங்கள் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தியப் புராணத் தொன்மங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும், நாட்டுப் புறக் கதைகளின் முடிச்சுகளையும்  நிகழ்காலக் கேள்வியாக மாற்றும் வேதிவினையைச் சரியாகச் செய்தவர் அவர். யயாதி, ஹயவதனா, துக்ளக், பலிபீடம், நாகமண்டலம், அக்னியும் மழையும் எனத் தமிழில் அவரது நாடகங்களை அதிகம் மொழிபெயர்த்தவர் கதாசிரியர் பாவண்ணன். இந்நாடகங்களைக் கர்னாடே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகப் பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளார். நாகமண்டலா, ஹயவதனா, துக்ளக் போன்ற நாடகஙக்ள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களிலும் பாடங்களாக உள்ளன.  இவையல்லாமல் ஆறு நாடகங்கள் கன்னடத்திலேயே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக நாடக நாள் செய்தியை வழங்குவதற்குத் தேர்வு செய்யப்பட்ட ஒரே இந்திய அரங்கியலாளர் கர்னாட். 2002 ஆம் ஆண்டிற்கான நாடகச் செய்தியைக் கர்னாட் வழங்கினார்.

நாடகக்காராகத் தொடங்கிய கிரிஷ் கர்னாட் திரைப்படத்துறையிலும் பல சாதனைகளைச் செய்துள்ளார். கன்னடப் புதிய அலைச் சினிமாவுக்கான கதை, திரைக்கதைகளை எழுதியதோடு இயக்குநராகவும் செயல்பட்டவர். பின்னர் இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்தவர். தமிழில் காதலன், குணா, ஹேராம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் விருந்துப் பேராசிரியராகவும் புல்பிரைட் உதவித்தொகை பெற்ற ஆய்வாளராகவும் இருந்த கர்னாடின் மரணம் இந்திய அறிவுலகத்திற்குப் பெரும் துயரச்செய்தி.