மூடர்கூடம் நவீன் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்து தனராம் சரவணன் இயக்கியிருக்கும் படம் கொளஞ்சி. இப்படத்தின் சில காட்சிகள் தற்போது பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

படத்தின் ஒருசில காட்சியில் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை கேள்விக் கேட்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள்தான் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஊர் குருக்கள், தர்மகர்த்தா உள்ளிட்டவர்களிடம் சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கேள்விக் கேட்கும் சமுத்திரக்கனி, இங்கே நிலவி வந்த மரபுவழி வழிபாடும் வடக்கில் இருந்து வந்த சாஸ்திரங்கள் மற்றும் தெய்வங்களை கொண்டு, இங்கே இருக்கும் மனிதர்களுக்குள் எப்படி வேறுபாட்டையும் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்டுவந்ததுள்ளது என்பதை கேள்வி கேட்கிறார் சமுத்திரக்கனி.

மேலும் ‘தமிழ்நாட்டில் மட்டும்தான் சாதி பெயரை அடைமொழியாகச் சேர்ப்பதில்லை அதற்குக் காரணம் பெரியார் என்றொருவர் இங்கு இருந்தார்’ போன்ற வசனங்கள் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அதுமட்டுமின்றி போலி தமிழ்தேசிவாதிகளின் முகத்திரையைக் கிழிக்கும் வண்ணமும் வசனங்கள் இடம்பெற்றிருக்கிறது

சமுத்திரக்கனி முதன்மைப் பாத்திரமாக நடிக்கும் இப்படத்தில் சங்கவி, நேனா சர்வார், கிருபாகரன், நசாத் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு நடராஜன் இசையமைத்துள்ளார். படம் இந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வரவிருக்கிறது.