மிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் செய்தி சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது என சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுத்த தமிழகச் சிறைத்துறை நிர்வாகம், செய்திகளை தவிர்த்து திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு சேனல்களை ஒளிபரப்ப சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. கைதிகள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்கலாம் ஆனால் நாட்டு நடப்பை அறிந்துக்கொள்ளக் கூடாது எனக் கூறுவது கைதிகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக என்னைப் போன்று சிறையில் இருக்கும் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சல் இருக்கும். எங்களுக்குச் சிறையில் தொலைக்காட்சி செய்தி பார்ப்பதுதான் ஒரே பொழுதுபோக்கு. ஆனால், மதுரை சிறையில் இந்தி மொழியில் மிகவும் பழமையான தொலைகாட்சி நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பபடுகின்றன.

எங்களுடைய தாய் மொழியான தமிழ் மொழியில் செய்தியோ, நிகழ்ச்சிகளையோ பார்க்க வாய்ப்பில்லை. அதனால், மற்ற சிறைகளில் உள்ளதுபோல மதுரை சிறையிலும், தமிழ்மொழியில் செய்தி, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணையின்போது, ரவிச்சந்திரனின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், சிறைத்துறை அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைத்துறை கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் சிறைத்துறை டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா. அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் இதர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம் என்றும் செய்திச் சேனல்களை மட்டும் ஒளிபரப்பக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.