ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக மாறி வட தமிழகம், தெற்கு ஆந்திரா அருகே சுமார் 300 கி.மீ தொலைவில் வர வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று (ஏப்ரல் 29) சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன். “தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்குத் தென்கிழக்கே, சுமார் 870 கி.மீ தொலைவில் ஃபானி புயல் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து தீவிர புயலாகவும், நாளை அதிதீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திரா கரைக்கு அருகில் சுமார் 300 கி.மீ தொலைவு வரை வரக்கூடும்.

மழையை பொறுத்தவரையில், ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரண்டு நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். காற்றை பொறுத்தவரையில் வட தமிழக கடலோர பகுதிகளில் நாளை காலை மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், சமயங்களில் 60 கி.மீ வேகத்திலும், நாளை மாலை மணிக்கு 50 முதல் 70 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.” என்று தெரிவித்தார் பாலச்சந்திரன்.

மேலும் பேசிய அவர், “கடல் நிலையைப் பொறுத்தவரையில், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு இன்று முதல் மே 2ஆம் தேதிவரை செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனே கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.