மன்னார்குடி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மன்னை நகர் பகுதியில் பட்டாசு கிடங்கு ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு திருவிழாவிற்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 27) காலை வழக்கம்போல் பட்டாசு கிடங்குக்கு வந்த தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பட்டாசு கிடங்கு தரைமட்டமானது.

கிடங்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பாபு, சிங்காரவேலு, மோகன், வீரையன், அறிவு, சுரேஷ் ஆகிய ஆறு பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். சம்பவமறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த பட்டாசு கிடங்கிற்கு முறையான உரிமம் உள்ளதா என்றும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.