இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் காலத்தில் அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாக இருந்தது. இந்தோ -சீனா போரில் இந்தியாவிற்கு ஆதரவு காட்டியவர் அப்போதை அதிபர் ஜான் பிட்ஜிரால்டு கென்னடி. அவர் டல்லாஸ் நகரத்தில்  கொல்லப்பட்டார் என வானொலியில் செய்தியாகக் கேட்டிருக்கிறேன்;  பள்ளிப்பருவத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால், இங்கே வந்திறங்கியபோது   டல்லாஸ் (DALLAS) என உச்சரிப்பது தவறு; ‘டேலஸ்’ என்றே உச்சரிக்க வேண்டும் என உணர்த்தப்பட்ட து. ஆனாலும் நான் டல்லாஸ் என்றே எழுதுகிறேன். 

டல்லாஸ் நகரில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் முதன்மையான இடங்களாக அந்த இரண்டு இடங்களும் இருந்தன. அத்தோடு அந்த  இரண்டு இடங்களுக்கும் பொதுவான ஒன்றும் இருந்தது.  அது நெடுங்கொம்பு மாடுகள் (Longhorn Cattles). ஒன்றில் நேரடியான ஊர்வலக்காட்சி; இன்னொன்றில் சிற்பக்காட்சியால் ஆன ஊர்வலம். கூகுள் வரைபட த்தில் பாதைகளைத் தேடியபோது வீட்டிலிருந்து 50 மைல் தூரத்தில் சிற்பக்காட்சி இருக்கும் பயோனியர் பிளாசாவைக் காட்டியது. அது டல்லாஸ் நகரின் நகர்மையப்பகுதி. ஆனால் நேரடி ஊர்வலக்காட்சி நடக்கும் ஸ்டாக்ஸ்யார்டு 30 மைல் தூரத்தில் இன்னொரு திசையில் இருக்கிறது. டல்லாஸின் நான்காவது பிரிவில் இருக்கிறது.  ஒரு முக்கோணத்தின் மூன்று முனைகள் போல. ஆக இரண்டையும் ஒரே நாளில் பார்க்க முடியாது. ஒவ்வொன்றையும் நின்று நிதானமாகப் பார்க்கச் சில மணி நேரங்கள் தேவை. 

நெடுங்கொம்பு மாடுகள் டெக்சாஸ் மாநிலத்தின் பண்பாட்டு அடையாளமாகக் கருதப்படுகின்றன. ஐக்கியஅமெரிக்க மாநிலங்கள் முழுவதும் விளையாடப்படும் முதன்மையான விளையாட்டு கால்பந்தாட்டம். ஒவ்வொரு மாநில அணியும் அம்மாநிலத்தின் பண்பாட்டு அடையாளப்பெயரே சுட்டிக்கொள்கின்றன. டெக்சாஸ் மாநிலத்தின் கால்பந்தாட்ட அணியின் பெயர் நீண்டகொம்பு மாடுகள் அணிதான். மாநில அணிக்கு மட்டுமல்லாமல் பெருநகரங்களில் இருக்கும் உயர்கல்வி நிறுவனமான டெக்சாஸ் பல்கலைக்கழக அணிகளின் பெயர்களும் அதே பெயரில் தான் அழைக்கப்படுகின்றன.  நெடுங்கொம்பு மாடுகளோடு தொடர்புடைய இரண்டு இடங்களையும் பார்த்துவிடுவது என்ற தீர்மானத்தில் முதல் விருப்பம் ஸ்டாக்ஸ்யார்டு.

இரவு பகல் என்ற வேறுபாடில்லாமல் திறந்திருக்கும் ஸ்டாக்ஸ்யார்டு பேரங்காடிக்கூடமாகவும் பண்பாட்டுக் காட்சிக்கூடமாகவும் சுற்றுலா விரும்பிகளின் ரசனைக்குரிய இடமாகவும் இருக்கிறது. நன்றி சொல்லும் நாள், குடியரசு தினக்கொண்டாட்டம் போன்ற ஒன்றிரண்டு நாட்களைத் தவிர எல்லா நாளும் திறந்திருக்கும் அங்கு தினசரி இரண்டு முறை நெடுங்கொம்பு மாடுகளின் ஊர்வலம் நடக்கும் என இணையத்தகவல்கள் தெரிவித்தன.  முற்பகல் 11.00 மணிக்கும் பிற்பகல் 04.00 மணிக்கும் நடக்கும் ஊர்வலக்காட்சிகளில் முற்பகல் காட்சியைக் காண்பது என்று திட்டமிட்டுக் கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பிப் போகும் வழியில் வனங்களும் வீடுகளும் என மாறிமாறிக் கடந்து போய்க்கொண்டே இருந்தன. ஸ்டாக்ஸ்யார்டு இருக்கும் இடம் நகர அடையாளத்திலிருந்து ஒதுங்கியே இருக்கிறது. சுற்றிலும் அடர்ந்த மரங்கள்.

ஸ்டாக்ஸ்யார்டைப் பார்ப்பதற்கு நுழைவுக்கட்டணம் உண்டு. சிறுவர்கள்(15 வயதிற்குள் உள்ளவர்கள் சிறுவர்கள், 64 வயதைத்தாண்டியவர்கள் முதியவர்கள் என்ற அடிப்படையில் சலுகைகள் இருந்தன. வாகனம் நிறுத்தத் தனிக்கட்டணம். உள்ளே நுழைந்தபோது மாடுகளின் ஊர்வலம் தொடங்குவதற்கு ஒருமணி நேரம் இருந்தது. பெருங்கோட்டைக் கதவுகளைப் போல எல்லாச்சுவர்களும் மரத்தால் ஆன சுவர்கள். பத்து ஏக்கருக்கும் குறையாத பரப்பில் அமைந்திருக்கும் ஸ்டாக்ஸ்யார்டு  அங்காடியாகவும் கண்காட்சிக்கூடங்களாகவும் விளங்கும் 100 க்கும் அதிகமான கூடங்கள் உள்ளன. 

கல்லூரி நாட்களில் பார்த்து ரசித்த ஹாலிவுட் வேட்டைத் திரைப்படங்கள் வரும் ‘கௌபாய்’ பாத்திரங்களின் உடைகளை அணிந்த நடிகர்கள் அங்கங்கே திரிந்தார்கள். கனமான காலனிகள், தொப்பிகள், இடுப்புப்பட்டைகள், கால்சட்டைகள் என எல்லாமே மிருகத்தோலாலானவை. அவர்களோடு நின்று படம் எடுத்துக்கொள்ள விரும்பி நெருங்குபவர்களோடு படம் எடுத்துக்கொள்கிறார்கள். இடுப்புத் துப்பாக்கிகளையும் தலைத்தொப்பிகளையும் வெவ்வேறு கோணத்தில் நிறுத்திப் படம் எடுக்கும்படி காட்சி அளிக்கிறார்கள். நாங்களும் அந்த எண்ணவோட்டத்தில் கலந்துகொண்டோம். விரியும் வட்டத்தொப்பி, அரைக்கால்சட்டை அணிந்தவனாக படங்கள் எடுத்தபோது  பனி படர்ந்த அமேசான் காடுகளில் திரிந்த கௌபாய்ப் படக்காட்சிகள் நினைவில் வந்துபோயின. ரோமில் இருக்கும்போது ரோமானியமாக மாறிக்கொள்ளும் மனநிலை.

டெல்லாஸ், டெக்சாஸ் மாநிலத்தின் வணிகத்தொழில் நகரம். அத்தோடு பெரும் தொழிற்சாலைகள் பலவற்றின் தொழிற்கூடங்களும் அங்கே இருக்கின்றன. ஏராளமான தகவல் தொழில்நுட்பப் பூங்காங்களின் தலைமை அலுவலகங்கள் இங்கே செயல்படுகின்றன. அதனாலே இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் இங்கே பணியாற்றும் கூட்டம் அதிகம்.  ஆனால் அதன் தொடக்க நிலைத் தொழிலாக மாட்டிறைச்சித் தொழில் இருந்துள்ளது. மாட்டிறைச்சி தயாரிக்கும் கூடங்கள் இருந்த அந்தப்பகுதிதான் ஸ்டாக்ஸ்யார்டு. சட்டவிரோதமாக மாட்டிறைச்சி தயாரிப்பவர்களும், கால்நடை வளர்ப்பவர்களும் சந்தித்துக்கொள்ளும் சந்தையாக இருந்த இடம் இப்போது அதன் வரலாற்றை – பாரம்பரியத்தை நினைவூட்டம் காட்சிக்கூடமாகத் திகழ்கிறது. அதே நேரம் அவற்றின் விற்பனையகங்களைக் கொண்ட அங்காடித்தெருவாகவும் இருக்கிறது.   

மாடுகள், ஆடுகள், மான்கள், யானைகள், எனப் பெரிய கொம்புகள் கொண்ட விலங்கினங்களின் தலைகளைக் கலைப்பொருளாக்கி விற்பனை செய்யும் அங்காடிகள் பல இருக்கின்றன. பெருவிலங்குகள் மட்டுமல்லாமல் குரங்கு வகைகள், அணில்கள், நரி, நாய் எனப் பலவகைக் கால்நடைகளின் தோலால் ஆன ஆடைகள் மட்டுமல்லாமல் தரைவிரிப்புகள், சுவரொட்டிகள், பணப்பைகள் எனப் பலவகையான பொருட்கள் பரப்பிக்கிடக்கின்றன. கால்நடைகளை வேட்டையாடிய கௌபாய் மனிதர்களின் ஆடைகளும் அணிகலன்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. அவர்களின் வீரதீரச் செயல்களின் அடையாளமாக அணியும் பட்டைகளில் வித்தியாசங்கள் இருந்துள்ளன. அந்தப் பட்டைகளை விற்கும் விற்பனையகங்கள் நிறைய உள்ளன. கைக்காப்புகள், விரல்களில் அணியும் மோதிரங்கள், பனியன்கள், தொப்பிகள் என ஒவ்வொன்றிலும் நெடுங்கொம்பு மாடுகள் லட்சிணையாகப்பொறிக்கப்பட்டுள்ளன.

 நெடுங்கொம்பு மாடுகளின் ஊர்வலக்காட்சி தொடங்கும் அறிவிப்புப் பேரோசை ஒன்றின் வழியாக அறிவிக்கப்பட்ட து. அங்காடிகளுக்குள் இருந்தவர்கள் எல்லாம் ஊர்வலம் வரும் வீதிகளின் ஓரத்தில் வந்து வரிசைகட்டினார்கள்.  ஒவ்வொரு பக்கமும் மூன்றடி நீளத்திற்கும் குறையாத கொம்புகளைத் தாங்கிய மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தபோது ஓரிருவர் கௌபாய் வேடத்தில் குதிரை மீது பவனி வந்தனர். ஊர்வலத்தின் போது எழுப்பப்பட்ட இசையடுக்குகளைத் தாண்டி, நீண்ட கொம்பு மாடுகளின் இருப்பு, வரலாறு, தொழில் வளர்ச்சி எனக் கதைபோலச் சொல்லப்படும் குரல் பின்னணியில் கேட்டுக்கொண்டிருந்தது. 

11.00 மணிக்குத் தொடங்கிய ஊர்வலம், ஒரு மணி நேர அளவுக்கு நடந்தபின் ஒரு காட்டுப்பகுதிக்குள் நுழைந்துவிடுகிறது. ஒவ்வொருவரும் ஏதாவதொரு இடத்தில் நின்று ஊர்வலக்காட்சியைப் படம் எடுத்துக்கொள்கிறார்கள்;பின் அங்காடிகளுக்குத் திரும்புகின்றார்கள். அமெரிக்காவின் புகழ்பெற்ற பங்குச்சந்தை அவென்யூ ஒன்றிருக்கிறது. அதனைச் சுற்றி செங்கல் வீதிகளும் வரலாற்றுக்குறைப்புகளை கொண்ட ஆவணக்காப்பகங்கள், பலநாட்டு உணவு வகைகளை அளிக்கும் உணவகங்களும் இருக்கின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் வனப்பைச் சரிசெய்யும் அழகு நிலையங்கள், சலூன்கள், சிறுவர் ஆடையகங்கள் என வரிசையாக இருக்கின்றன. அவற்றில் வாங்க நினைப்பவர்கள் உள்ளே நுழைகின்றார்கள். மாடுகளின் ஊர்வலத்தைப் போல அங்கே இருக்கும் இரட்டைக்குதிரைகள், நான்கு குதிரைகள் பூட்டிய தேர்களின் பவனி வர நினைத்தால் பணம்கட்டிப் பவனி வரலாம். பெண்சாரதிகளும் ஆண் சாரதிகளும் ஓட்டும் தேர்களில் ஒன்றில் ஏறிப் பவனி வரும்போது ஸ்டாக்யார்டின் பெருமைகளும் வரலாறும் சொல்லப்படுகின்றன. 25 நிமிடப் பயணத்தில் அந்தத் தேர்ப்பவனி முடிகின்றது.  இசைக்கச்சேரி நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்தில் நின்று ரசிக்கலாம்; ஆட நினைத்தால் சேர்ந்து ஆடலாம். இந்தியக் கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களில் தற்காலிகமாக அமைக்கப்படும் ரங்கராட்டினம், சிறுவர் ரயில், மரக்குதிரைச் சறுக்குகள் போலப் பலவும் இருக்கின்றன. வளமான உடல்வாகுகொண்ட மாடுகளும் குதிரைகளும் அடைக்கப்பட்ட கொட்ட டிகளும் உள்ளன. பிள்ளைகளோடு வந்தவர்கள் கொண்டாடிக்களித்துத் திரும்புகிறார்கள். 

ஸ்டாக்ஸ்யார்டில் பார்த்த நெடுங்கொம்பு மாடுகளின் நிஜமான ஊர்வலத்தைப் பார்த்த நாங்கள் அதன் கலாபூர்வமான காட்சியைப் பார்க்கச் சில நாட்கள் கழித்தே போனோம். வானைத்தொடும் அளவுக்கு உயர்ந்த கட்டடங்கள் நிரம்பிய டெல்லாஸ் நகரின் நகர்மையத்திலிருந்து நடக்கும் தூரத்தில் இருக்கிறது   பயோனியர் பிளாசா என்னும் காட்சிக்கூடம். டெக்சாஸ் மாநிலத்தின் இலட்சிணையான நெடுங்கொம்பு மாடுகள்   இயல்பான உயரம், எடை போன்றவற்றைவிடப் பெரிதாக உருவாக்கப்பட்ட செம்புச்சிலைகள் அவை. ஒவ்வொன்றும் ஆறடி உயரம் கொண்ட சிற்பங்கள்.  மேய்ச்சல் நிலத்தில் திரியும் மாடுகளின் வெவ்வேறு உடல் அசைவுக்காட்சிகள். பாயும் மாடு; தாவும் மாடு; இறங்கும் மாடு; நீரருந்தும் மாடு; மோதிக்கொள்ளும் மாடு; இணையாக நகரும் மாடுகள் என விரிந்துள்ள காட்சி ரசனைக்குரியதாக இருக்கிறது. மரங்கள் நிரம்பிய ஒரு குன்றுப்பிரதேசத்தின் உள்பகுதியில் மேய்ந்துவிட்டு சரிவான பாதையொன்றின் வழியாக இறங்கி வந்து நீர் அருந்திவிட்டுச் சமவெளிக்கு நகரும் காட்சியைச் சிற்பங்களாக்கியிருக்கிறார்கள். மொத்தம் 49 மாடுகள். மாடுகளின் முன்வரிசையில் ஒருவன் ஒரு மாட்டின் மீது அமர்ந்திருக்கிறான்.  அதேபோல் குன்றின் உள்ளே கடைசியில் ஒருவன் இருக்கிறான். இடையில் ஓடும் ஆற்றோரம் நீரருந்தும் மாடுகள் பக்கம் ஒருவன் மாட்டின் மீது அமர்ந்திருக்கும் சிலைவடிவம் இருக்கிறது. மூவரும் மாட்டு மந்தைகளின் மேய்ப்பர்கள் என்பதுபோல.

19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் டெக்சாஸ் மாநிலத்தின் பொருளாதார வளத்திற்குக் காரணமாக விளங்கிய பெருங்கொம்பு மாநாடுகள் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து டல்லாஸ் நகருக்குக் கொண்டுவரப்பட்ட வரலாற்றினை நினைவு கூறும் இந்தத் திறந்தவெளிக் கண்காட்சிக்கூடம் இவ்வகையான கண்காட்சிக்கூடங்களில் பெரியது. நாலரை ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள அந்தப் பகுதியில் உள்நாட்டுப்போரில் இறந்தவர்களின் நினைவுக்கல்லறைகளும் இருக்கின்றன. 1992 இல் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் நிறைவுபெற்ற அந்தத்திட்டத்தைப் பொறுப்பேற்று நடத்திய சிற்பியின் பெயர் ராபர்ட் சிம்மர்ஸ் என்கிறது அங்கே வைக்கப்பட்டுள்ள குறிப்பு. ரயில் பாதையாக இருந்த அந்த நிலத்தை வழங்கிய டல்லாஸ் நகர நிர்வாகத்தின் முயற்சிக்குச் சம அளவில் தனியார் நிறுவனங்களும் நிதியுதவி செய்துள்ளன.  டல்லாஸ் நகரைத் தாண்டிச் செல்லும் சாலைகள் பலவற்றில் பயணம் செய்யும்போது கறுப்புநிற மாடுகளின் கூட்ட த்தைத் தோட்டக்காடுகள் பார்க்கமுடிகிறது. உடல் பருமனும் உயரமும் பெருங்கொம்பு மாடுகளைப் போல இல்லை. அதனாலேயே பெருங்கொம்பு மாடுகள் காட்சிப்பொருளாக மாறியிருக்கின்றன. 

நேரடிக்காட்சியாகவும் சிலைவழிக்காட்சியாகவும் நெடுங்கொம்பு மாடுகளின் ஊர்வலத்தை ஸ்டாக்யார்டிலும், பயோனியர் பிளாசாவிலும் பார்த்து திரும்பியபோது அமெரிக்காவிலிருந்து பெருங்கொம்பு மாடுகளின் நினைவாக எதையாவது கொண்டு போகவேண்டும் என்று தோன்றியது. அதன் பிறகு தமிழ்நாட்டில் இதுபோன்று கால்நடை சார்ந்த காட்சிக்கூடம் ஒன்றை உருவாக்கலாம் என்றால் எதனை முன்மொழியலாம் என்ற நினைத்தபோது உடனடியாக நினைவுக்கு வந்தது   சல்லிக்கட்டு.

******* 

எனது பள்ளிக்காலத்தில் மதுரை மாவட்டக்கிராமங்கள் பலவற்றில் சல்லிக்கட்டைப் பார்த்தவன். 60 வீடுகளே இருந்த எனது கிராமத்திலேயே வீட்டுக்கொரு மாட்டை வாடிவாசலிலிருந்து அவிழ்த்துவிட்டுச் சல்லிக்கட்டு கொண்டாடியிருக்கிறார்கள். கல்லூரிப்படிப்பின்போது மதுரைக்கு அருகில் அலங்காநல்லூரிலும் அவனியாபுரத்திலும் பாலமேட்டிலும் நடந்த சல்லிக் கட்டுகளைப்    பார்த்திருக்கிறேன். சிங்கம்புணரிக்கருகே நடக்கும் மஞ்சுவிரட்டுக்கு எனது வகுப்பு மாணவர்கள் அனைவரும் சேர்ந்து போயிருக்கிறோம். சின்னச்சின்னக் குன்றுகளுக்கிடையில் நடக்கும் மஞ்சி விரட்டில் நூற்றுக்கணக்கான மாடுகள் ஒரே நேரத்தில் அவிழ்த்துவிடப்படும். அங்கு வாடிவாசல் எதுவும் கிடையாது. அவை எல்லாம் ஆண்டில் ஒருநாள் நடக்கும் நிகழ்வுகள். 

Jallikattu - Wikipediaஅந்தக் கிராமத்திலிருந்து நான் வெளியேறிப்பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் வெளியேறும்போதே ஆடுகளும் மாடுகளும் குறைந்துவிட்டன. சேவல் கூவும் அதிகாலைகள்கூட இல்லாமல் போய்விட்டன. ஆனால் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 3 நாட்கள் விழா இன்னும் இருக்கிறது. சல்லிக்கட்டு இல்லை. அடையாளமாக ஒன்றிரண்டு மாடுகள் ஓடுகின்றன. மனிதர்கள் இருக்கும் வரை விழாக்களும் அவற்றின் அடையாளங்களும் இருக்கும். தேவையற்றவை எனக் கருதப்படுபவை கைவிடப்படும். சில ஆண்டுகளுக்கு முன்னால், விலங்குகள் நல அமைப்பான பீட்டா சல்லிக்கட்டு நடப்பதைத் தடைசெய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்து நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றது. தமிழ் அடையாளம் எனவும், வீர விளையாட்டு எனவும் திரண்ட கூட்டத்தின் காரணமாகத் திரும்பவும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

நிதானமாக யோசித்துப் பார்த்தால் சல்லிக்கட்டு  ஒட்டுமொத்தத் தமிழகத்தின் அடையாளமல்ல என்பதும், அது ஒரு வட்டாரப்பண்பாட்டின் அடையாளம்  என்பதும்  புரியவரலாம். டெக்சாஸ் மாநிலத்தின் நெடுங்கொம்பு மாடுகளின் ஊர்வலம்கூட ஒரு வட்டாரத்தின் அடையாளம் தான். அதை மாநிலத்தின் அடையாளமாக ஆக்கியிருக்கிறார்கள். அப்படியொரு அடையாளமாக ஆக்குவதற்குச் சல்லிக்கட்டு ஏற்ற ஒன்று. ஏனென்றால் அது நிகழும் நாள் முக்கியமானது. தமிழர்களின் திருநாளான  பொங்கல் கொண்டாட்டத்தோடு இணைந்த ஒன்று. அதனை மையமாக்கி ஒட்டு மொத்தத் தமிழர்களின் மனவோட்டத்தையும் – உணர்வெழுச்சியையும் தூண்ட முடியும். அவ்வுணர்வெழுச்சிக்கு நீண்டகாலத் தேவையைத் தர விரும்பும் நிலையில் சல்லிக்கட்டை ஓரிட த்தோடு இணைத்துக் கொண்டாட்டமாக மாற்ற முடியும். அந்த மாற்றத்திற்குப் பண்பாட்டு அடையாளத்தைத் தருவதோடு பொருளியல் காரணங்களை உருவாக்கும் நிலையில் நிலைபேறான இருப்பைவும் தரமுடியும்.  சல்லிக்கட்டைத் தமிழ்நாட்டுச் சுற்றுலாவின் பகுதியாக மாற்றி வணிகப்பண்பாட்டோடு உருவாக்க நினைத்தால், டல்லாஸ் நகரில் இருக்கும் ஸ்டாக்ஸ்யார்டு நல்லதொரு முன்மாதிரியாக இருக்கும். 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மேற்கின் மேற்கே 8 : கொண்டாட்ட த்திற்கான நெடும்பயணம் - மேற்கின் மேற்கே
  2. மேற்கின் மேற்கே 7 : ஹூஸ்டன்: தமிழ் இருக்கையும் நாசாவும் - அ.ராமசாமி
  3. மேற்கின் மேற்கே 6 : ஆஸ்டினும் பேரவைக்கூடமும் அலாமோ போர்க்காட்சி நினைவுகளும் - அ.ராமசாமி
  4. மேற்கின் மேற்கே 5 :சான்அண்டோனியோ: நதியோடும்நகரம் ….. – அ.ராமசாமி
  5. மேற்கின் மேற்கே 3 : ஒக்கலகாமா:  திரும்ப நிகழ்த்தும் பயங்கரம் - அ.ராமசாமி
  6. மேற்கின் மேற்கே 2 : மாறியது திசை; மாற்றியது - அ.ராமசாமி
  7. மேற்கின் மேற்கே - 1 : கிழக்கென்பது திசையல்ல. மேற்கென்பதும். - அ.ராமசாமி