திக்குத் தெரியாத உலகில்

கையிலிருக்கும் காசைக் கொண்டு 3,000  அல்லது 4,000 ரூபாயில் மிதிவண்டி வாங்கிக் கொண்டு பீகாருக்குச் செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சென்னையின் எல்லையைத்தாண்ட முடியாமல் காவல்துறையினரால் விரட்டப்பட்டு நகரத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியினூடே …

பிகாரைச் சேர்ந்த பதினைந்து 15 வயதுச் சிறுமி ஜோதிகுமாரி, குர்கவானிலிருந்து உடல்நலம் சரியில்லாத தந்தையை மிதிவண்டியில் வைத்து, தொடர்ந்து ஏழு நாட்கள், ஏறக்குறைய 1,200 கிமீ மிதித்துச் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இதிலுள்ள வலியையும் துயரத்தையும்விட, ஜோதிகுமாரியை இவான்கா டிரம்ப் பாராட்டிஉள்ளார் என்பதையும் இதனுடன் சேர்த்தே பார்க்க வேண்டியிருக்கிறது.

எட்டு கோடிப் பேர் இடம்பெயர்ந்து வந்தத் தொழிலாளர்களில் அதிகபட்சமாய் நாற்பது லட்சம் பேர் ஊர்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள். இன்னும் நாற்பது லட்சம் பேர் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். சென்றவர்கள் அதிகபட்சமாய் ஊர் சென்றடைய வழியில்லாமல் தனிமைப்படுத்தப்பட்டுப் போயிருப்பார்கள். ( திருப்பூரின் மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதிப்பேர் இவர்கள். இவர்களில் 50 ஆயிரம் பேர் அனுப்பப்படிருக்கிறார்கள். 1 லட்சம் பேர் திருப்பூர் வாழ்க்கையே போதும் என்று இருக்கிறார்கள். போனவர்கள் வட மாநிலத்தில் நவம்பர்வரை  அறுவடை கால வேலை இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்றிருக்கிறார்கள். இதில் வடநாட்டில் வெட்டுக்கிளிகள் வேறு அறுவடையைப் பதம் பார்க்கலாம் என்ற பயம் உள்ளது. ஆதிவாசி மக்களிடம் ஒரு நம்பிக்கைப்பாடல் இப்படி உண்டு.” நாங்கள் விளைவித்ததில் பறவைகள் தின்றது போக, பெரிய ஜீவன்கள் யானை போன்றவை அழித்தது போக, மற்றவை எங்களுக்குப் போதும் )

தனிமைப்படுத்தப்பட்டப் பகுதிகளில் அவர்களுக்கான சுகாதாரவசதிகளும் உணவு விநியோகமும் முறையாக இல்லாமல் அவர்கள் மனிதர்களாய் நடத்தப்படவில்லை என்பதே வரும் செய்திகளாய் உள்ளன. அதிகபட்ச தொடர்வண்டிகளை இயக்குகிறோம், அதிகப்டச பேருந்துகளை இயக்குகிறோம் என்ற சாதனைச்செய்திகள் ஜோதி குமாரியின் சாதனையூடே தொடர்கின்றன.

அந்த எட்டு கோடிப் பேரில் இப்போது ஊருக்கு அனுப்பப்பட்டிருப்பவர்கள் நாற்பது லட்சமே. இன்னும் நாற்பது லட்சம்பேர்  பதிவு செய்திருக்கிறார்கள் . நீதிமனறங்கள்., மனித உரிமை அமைப்புகள் திகைத்துப் போய் பேசாமல் நிற்கிறார்கள் .

இவர்களில் பலரின் ஆதார்கார்டுகள் அபகரிக்கப்பட்டு   வெளியே போய் விட்டால் வேலைக்கு ஆள் கிடைக்காது என்று தனிமைப்படுத்தப்பட்டு மிரட்டலால் ஒதுங்கியிருப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகம். இதற்குக் காவல் துறை ஒத்துழைப்பு வேறு.

எந்த சூழலானாலும் இவர்களின் மனநல பாதிப்பு என்பது அதிக பட்சபட்சமாய் தற்கொலைக்குக் தூண்டி பலரும் தற்கொலை செய்து கொள்கிற சூழல்.

அவர்களுக்கான மத்திய அரசின் 3500 கோடி ரூபாய் உதவித் திட்டம் என்பதில் கிடைக்கும் 5 கிலோ அரிசி, 5 கிலோ  கோதுமை, ஒரு கிலோ பருப்பு அவர்களின் குடும்பத்தினருக்கு ஒருவார உணவாகும் ..

மற்ற தினங்கள் என்ன செய்ய ..பட்டினி சாவுகள் தொடரலாம் என்ற பயம் வந்து விட்டது.மே 28 உலகப்பட்டினி விழிப்புணர்வு தினம் வேறு அதை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்துக்குறைபாடால் சாகிறவர்கள் ஒரு புறம் இருந்தாலும் பட்டினி சாவுகள் தொடரலாம் என்ற பயம் வந்து விட்டது இன்றைய சூழலில் இடம் பெயர்ந்து தங்களின் நிலம் எதுவென அறியாதவர்கள்- நோ மேன்ஸ் லேண்ட் -மனிதர்களாய் இவர்கள் மதிக்கப்படாமல் நடத்தப்படும் சூழல்கள் ..

இவர்கள் தங்களை இனிமேல் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற இன்றைய நிலையில் அமைப்பு சாராத் தொழிலாளர்களின்  நல வாரியம் என்ற அமைப்போ இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நல சட்டங்களோ வெறும் வாய் அளவு வார்த்தைகளே ஆகிவிட்டன. வேலை வாய்ப்பைத் தரும் ஏழு இந்திய மாநிலங்களில் ஒன்று தமிழகம்.

இந்தியாவில், நாட்டுப் பிரிவினைக்கு அடுத்து, மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய துன்பியல் சம்பவம் என்றால், அது புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம்தான் என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.

“ஒரே வித்தியாசம், அப்போது கொடூரமான வகுப்புவாத வன்முறை இருந்தது. நம்மிடம் ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், மிருதுளா சாராபாய், கமலாதேவி சட்டோபாத்யாய போன்ற சுயநலமில்லா சிறந்த தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் தனிப்பட்ட, அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றாகச் செயல்பட்டு இந்தியாவை ஒருங்கிணைத்து, சமூகத்தையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்கள்.

ஆனால், தற்போது கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சுய விளம்பரத்துக்காகவும், சொந்தக் கட்சியின் நலனை வளர்க்கவும் மட்டுமே சிந்திக்கிறார்கள்” என்று ராமச்சந்திர குஹா சாடியுள்ளார்.

முன்பு வேலை வாய்ப்பு இருந்த  ஏழு மாநிலங்களில் இனி வேலைக்கு போதிய ஆள் கிடைக்காத நிலை குறைந்த வேலை இருந்தாலும். வீடு பாதுகாப்பானது என்ற உளவியல் நம்பிக்கை செத்தாலும் ஊருக்குப் போய்ச் சாவோம் என்ற தீர்மானத்துடன் நடந்துபோகவும் வைத்திருக்கிறது அவர்களை.

இதில் வெளிமாநில இடம் பெயர்ந்தத் தொழிலாளர்கள் என்பதைத் தாண்டி உள் மாநில  இடம் பெயர்ந்தத் தொழிலாளர்கள் நிலை ஊர் போய் சேர்ந்து விட்ட ஆறுதலில் திளைத்திருப்பதுதான். அங்கு அவர்களின் உணவுக்கான உத்திரவாதத்தை அவர்கள் மெதுவாக யோசிப்பார்கள். அதுவும் பெண்கள் நிலைமை இன்னும் மோசம். காலகாலமாய் ஆண்களை நம்பியிருந்தவர்கள் கூலி வேலையாக இருந்தாலும் ஏதாவது சம்பாதித்து குடும்பத்திற்குத் துணையாக இருப்போம் என்ற நம்பிக்கையில் மண் விழுந்து விட்டது

” ஒரே தேசம் ஒரே ரேசன் கார்டு “ காலத்தில் கிராமப்பஞ்சாயத்து, உள்ளாட்சி நிர்வாகம் போன்றவற்றுக்கு இருக்கும் அதிகாரம் மோடிக்கு முன்னால் எடப்பாடி அரசுக்கும் இருக்கும் அதிகாரம் போன்ற  நோஞ்சான் தன்மைதான்.

பக்கத்தில் இருக்கும் கேரள மாநிலத்தைப் பார்த்து அரசின் நிவாரண உதவிகள் , தன்னார்வத் தொண்டர்களின் ஆர்வம் , உள்ளாட்சிகளுக்கான அதிகாரம் போன்றவற்றிலிருந்து  தமிழகம் கொரானா காலத்திலாவது நிறையக் கற்றுக் கொள்ளலாம் . கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியதில் உலகுக்கே முன்மாதிரி கேரளா முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம் உண்மையானது என்கிறார்கள் வல்லுனர்கள்.

பசியால் வாடுபவனுக்கு மீன் சாப்பிட தருவதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது பற்றி பழைய மொழி நமக்குத் தெரியும்.

 

சோறு போடு, இலவசம் கொடு, எங்களைப் பிச்சைகாரர்களாக்கு  என்று தமிழகம் கெஞ்சிக் கொண்டிருப்பதை விட கேரளாவைப் பார்த்து பிச்சை வேண்டாம் வேலை கொடு, அடிப்படை உரிமைகளை நிறைவேற்று  என்று கேட்பதை தமிழகம் கற்றுக் கொண்டால் நல்லதுதான் .

கொரானா காலத்து ஜோக்குகள், கதைகளை அதிகம் உருவாக்கிய மாநிலமாக கொண்டாடப்படும் தமிழகம் கொரானா புதுப்பழமொழிகளிகளைக் கற்றுக் கொள்ள நேர்கிறது.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. வேடந்தாங்கலுக்கு வைத்த வேட்டு-சுப்ரபாரதிமணியன்
  2. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியைச் சூழும் அழிவின் மேகங்கள்-சுப்ரபாரதிமணியன்
  3. கொரோனா: மாயன் காலண்டர் சொன்ன உலக அழிவா? - சுப்ரபாரதிமணியன்
  4. ஒரு கிராம் வைரஸ் படுத்தும் பாடு- சுப்ரபாரதிமணியன்
  5. 'டீ ஷர்ட்’களாக மாறும் தண்ணீர் பாட்டில்கள்- சுப்ரபாரதி மணியன்
  6. தகியாய் தகிக்கும் பூமி- சுப்ரபாரதி மணியன்
  7. எழுத்தாளனும் காய்கறியும்—சுப்ரபாரதிமணியன்
  8. பசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன்
  9. புது அகதிகளின் உலகம் - சுப்ரபாரதிமணியன்
  10. பொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – சுப்ரபாரதிமணியன்
  11. குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் - சுப்ரபாரதிமணியன்
  12. வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி - சுப்ரபாரதிமணியன்
  13. டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம்
  14. பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள்
  15. வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு -சுப்ரபாரதிமணியன்