தமிழுக்கு அப்பால்-6

இன்று உலகத்தைச் சுற்றுவது என்பது ஒருவரிடம் உள்ள பணத்தைப் பொறுத்திருக்கிறது. பெரும்பணக்காரச் “சூரர்கள்” சொந்த விமானத்தில் இரண்டே நாளில்கூட உலகைச் சுற்றிவிட்டுப் புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடலாம். “சூரர்” அல்லாதோர் வாழ்நாளெல்லாம் முயன்றாலும் விமானநிலையத்தின் வாசலைக்கூட தாண்டமுடியாது. இக்கதை எழுதப்பட்ட காலத்திலும் இதுதான் நிலைமை என்றாலும், அக்கால ‘அம்பானி’ ஒருவர் உலகத்தை 80 நாட்களில் சுற்ற எவ்வளவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருந்தது என்பதைத்தான் இக்கதை விவரிக்கிறது.

கதைத்தலைவர் பிலியாஸ் ஃபாக். அவரது வேலையாள் ஒரு பிரெஞ்சுக் காரன், பஸ்பார்தூ(த்). தான் உறுப்பினராக இருக்கும் ரிஃபார்ம் கிளப்பில் உலகைச் சுற்றி 80 நாட்களில் போய்வந்துவிடுவேன் என்று ‘பெட்’ கட்டுகிறார் ஃபாக். பந்தயப்பணம் அப்போது(1830) இருபதாயிரம் பவுண்டு. அவரது சொத்தில் பாதி.

அக்காலத்தில் விமானம் கிடையாது. மொத்தப் பயணமும் இரயில், கப்பல் வழியாக மட்டுமே. அவர் உலகைச் சுற்றுவேன் எனப் பந்தயம் கட்டக் காரணமாக இருந்தவை இரண்டு நிகழ்வுகள்.

ஒன்று, இந்தியாவின் குறுக்கே பம்பாய்-கல்கத்தா இரயில் பாதை அமைக்கப்பட்டு விட்டது என்ற செய்தி. மற்றது, அமெரிக்காவின் குறுக்கே மேற்குக்கரை முதல் கிழக்குக் கரை வரை இரயில் பாதை முற்றுப் பெற்றுவிட்டது என்ற செய்தி.

  1. லண்டனிலிருந்து சூயஸ் வழியாக இந்தியாவை (பம்பாயை) அடைதல்.
  2. பம்பாயிலிருந்து கல்கத்தா சென்று, அங்கிருந்து ஹாங்காங் செல்லுதல்.
  3. ஹாங்காங்கிலிருந்துயோகஹாமா வழியாக சான்பிரான்சிஸ்கோ.
  4. அங்கிருந்து அமெரிக்காவினூடாகப் பயணித்து நியூயார்க் அடைதல்.
  5. நியூயார்க்கிலிருந்து லண்டன் திரும்புதல் —

என்பது அவர் பயணத்திட்டம். இதைத் தான் எண்பதே நாட்களில் செய்வதாக அவரது பந்தயம். ஆனால்…

இங்கிலாந்து பேங்க்கைக் கொள்ளையடித்து விட்டுத்தான் உலகை அவர் ஜாலியாகச் சுற்றுகிறார் என்று அவரைக் கைதுசெய்ய ஃபிக்ஸ் என்ற சிஐடி சூயஸில் காத்துக் கொண்டிருக்கிறான். பிடியாணை வராமல் தாமதப் படுகிறது. அவரை ஏதாவதொரு இங்கிலாந்தின் காலனியப் பகுதியில்–இந்தியாவிலோ ஹாங்காங்கிலோ–கைது செய்துவிடுவது அவன் திட்டம்.

பம்பாயில் பஸ்பார்தூ ஓர் இந்துக்கோயிலுக்குள் ஷூவோடு நுழைந்து மாட்டிக் கொள்கிறான். எப்படியோ உயிர் தப்பித்து இரயிலைப் பிடித்தால், கல்கத்தா இரயில்பாதை முற்றுப் பெறவில்லை என்று தெரிகிறது. பாதி வழியில் இறங்கி, அவர்கள் யானை ஒன்றை அமர்த்திக் கொண்டு பயணம் செய்கிறார்கள். கணவன் இறந்ததால் உடன்கட்டை ஏறுமாறு செய்யப்பட்ட அவுதா என்ற பெண்ணை ஃபாக், பஸ்பார்தூ இருவரும் வழியில் காப்பாற்றி உடனழைத்துச் செல்கிறார்கள். இந்துக்கோயிலில் பஸ்பார்தூ புகுந்ததை வைத்துக் கல்கத்தாவில் கைதுசெய்து தாமதப்படுத்துகிறான் ஃபிக்ஸ். ஆனால் பணம் கொடுத்துச் சமாளித்து, ஹாங்காங் செல்கிறார் ஃபாக்.

பஸ்பார்தூவுக்கு போதை மருந்தளித்து அவனைத் தனியே பிரித்து விடுகி றான் ஃபிக்ஸ். அதன் மூலம் ஹாங்காங்கிலிருந்து யோகஹாமா (ஜப்பான்) செல்லும் கப்பலில் ஃபாக் செல்லவிடாமல் தடுக்கிறான். அதனால் ஷாங்காய் சென்று அதேகப்பலைப் பிடிக்க நினைக்கிறார் ஃபாக். எப்படியோ தப்பி முன்னால் யோகஹாமா வந்துவிட்ட பஸ்பார்தூவை ஒரு சர்க்கஸ் குழுவில் கண்டுபிடிக்கிறார். பிறகு எல்லாரும் (நண்பனாக நடித்து உடன் வருகின்ற ஃபிக்ஸ் உள்பட) சான்ஃபிரான்சிஸ்கோ செல்கிறார்கள். இடையில் அவுதா – ஃபாக் காதல்!

சான்ஃபிரான்சிஸ்கோவிலிருந்து நியூ யார்க் செல்லும் இரயிலைப் பிடிக்கி றார்கள். வழியில் அரசியல் சண்டைகள். பிறகு இரயில் ஒரு வலுவற்ற பாலத்தைக் கடந்து செல்ல முடியாத நிலை. எப்படியோ மிக வேகமாக ஓட்டிச் சென்று இரயில் அதைக் கடக்குமாறு செய்கிறார்கள்.

அடுத்து பிரெய்ரிப் பகுதியில் சிவப்பிந்தியர்களின் தாக்குதல் நிகழ்கிறது. அவர்கள் பஸ்பார்தூவைக் கடத்திச் செல்கிறார்கள். ஃபாக் அவர்களைத் தொடர்கிறார். அவர்களை விட்டு இரயில் சென்றுவிடுகிறது. பஸ்பார்தூ வைக் காப்பாற்றி அழைத்துவரும் ஃபாக், ஸ்லெட்ஜ் மூலமாகச் சென்று அடுத்த இரயிலைப் பிடிக்கிறார். ஆனால் அவர்கள் செல்வதற்குள் இங்கிலாந்து செல்லும் கப்பல் போய்விடுகிறது.

என்ன செய்வது இப்போது? மனம் தளராத ஃபாக், ஒரு கப்பலையே வாங்கு கிறார். வழியில் அதற்கு எரிபொருள் தீர்ந்துபோனதால், அக்கப்பலின் மரத் தையே எரித்து, இன்னல் பட்டு, அயர்லாந்து அடைந்து, பிறகு இங்கிலாந் தின் லிவர்பூலை அடைகிறார். அங்கே ஃபிக்ஸ் ஃபாக்-கைக் கைதுசெய்து தாமதப்படுத்துகிறான். [ஆனால் மூன்றுநாட்கள் முன்னதாகவே உண்மை யான பேங்க் திருடன் கைது செய்யப்பட்டுவிட்டான் என்ற செய்தி அவனுக் குக் கிடைக்கிறது. ஃபிக்ஸின் ‘உலகப் பயணம்’, முழுவிரயம்!]

ஃபாக் அடுத்த இரயிலில் லண்டனை அடையும்போது தான் வரவேண்டிய நேரத்திற்குச் சிலநிமிடங்கள் தாமதமாகிவிட்டதையும் பந்தயத்தில் தான் தோற்று விட்டதையும் காண்கிறார்.

பாதிச் சொத்து பயணத்தில் போயிற்று, மீதிச் சொத்து பந்தயத்திற்குப் போயிற்று. அவுதாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்யப் பஸ்பார்தூவை சர்ச்சுக்கு அனுப்புகிறார். அவன் மகிழ்ச்சியோடு துள்ளிக்குதித்துக் கொண்டு திரும்பி வருகிறான்–அவர்கள் கிழக்குப் புறமாக உலகைச் சுற்றியதால் ஒருநாள் கூடுதலாக அவர்களுக்குக் கிடைத்திருக் கிறது! (அந்தக் காலத்தில் டேட்லைன் வகுக்கப்படவில்லை). ஆக, உடனே புறப்பட்டுத் தன் நேரத்துக்குச் சரியாக ஐந்து நிமிடம் இருக்கும்போது ரிஃபார்ம் கிளப்பை அடைந்து, தன் பந்தயப் பணத்தை வெல்லுகிறார் ஃபாக்!

இந்த நாவலின் ஆசிரியர் ஜூல்ஸ் வெர்ன் (1828-1905) பிரெஞ்சுக்காரர். அறிவியல் புதினத்தின் தந்தை.

வெர்ன் அக்காலத்தில் கற்பனை செய்ததெல்லாம்–நீர்மூழ்கிக்கப்பல்கள் உள்பட–அவரது எட்டுக் கற்பனைகளேனும் பிற்காலத்தில் அப்படியே அறிவியலினால் உண்மையாயின என்று சொல்வார்கள். விண்வெளி முதல் ஆழ்கடல் வரை, மின்விளக்குகள் முதல் கணினி வரை அவர் தொடாத விஷயங்கள் இல்லை. நிலவுக்குச் செல்வது, எரிமலைக்குள் பயணிப்பது, வானில் பறப்பது முதல், நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்குள் சுற்றுவது, பூமியின் மையத்துக்கே செல்வது என்றெல்லாம் கற்பனையைப் பறக்கவிட்டவர் அவர்! “நாம் எல்லாருமே, ஏதோ ஒரு வகையில், ஜூல்ஸ் வெர்னின் வாரிசுகள்தான்” – புகழ்பெற்ற அறிவியல் புதின ஆசிரியர் ரே பிராட்பரி.

“அறிவியல் தவறுகளினால் ஆனதுதான். ஆனால் அவை பயனுடைய தவறுகள். ஏனென்றால் அவை கொஞ்சம் கொஞ்சமாக உண்மையிடம் கொண்டு சேர்க்கின்றன!” – ஜூல்ஸ் வெர்ன்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
  2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
  3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
  4. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
  5. பரஜன் - க. பூரணச்சந்திரன்
  6. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
  7. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
  8. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
  9. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
  10. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
  11. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
  12. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
  13. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
  14. உடோபியா - க. பூரணச்சந்திரன்
  15. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
  16. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
  17. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
  18. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
  19. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
  20. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
  21. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
  22. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
  23. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
  24. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
  25. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
  26. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
  27. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
  28. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
  29. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
  30. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
  31. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
  32. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
  33. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
  34. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
  35. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
  36. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
  37. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
  38.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
  39. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
  40. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
  41. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
  42. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
  43. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
  44. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
  45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
  46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
  47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
  48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
  49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்