தமிழுக்கு அப்பால் – 7

அரபுக்கதைகளில் சிந்துபாத் என்பவன் ஏழு விசித்திரமான கடற்பயணங்களை மேற்கொண்டது பற்றிப் பலரும் படித்திருப்பார்கள். அதேபோலத்தான் கலிவர் என்பவனின் பயணங்களை எழுதியிருக்கிறார் ஜானதன் ஸ்விஃப்ட் என்ற ஆங்கில எழுத்தாளர்.

என் சிறுவயதில் கலிவரின் லிலிபுட் பயணம் என்று சிறுவர்க்குரிய கதையாகவே படித்தேன்.

புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சேர்ந்த கிளப் ஒன்றினால் கடல்பயண நூல்களை ஏளனம் செய்யும் விதமான நூல் எழுதவேண்டும் என்ற பணி அவருக்கு அளிக்கப்பட்டதாகவும் அதன்படி இந்தக் கதையை 1725இல் ஸ்விஃப்ட் எழுதிமுடித்ததாகவும் சொல்லப்படுகிறது.

கலிவர் என்பவன் ஒரு கப்பலின் மருத்துவன். அவன் நான்கு கடற் பயணங்களை மேற்கொள்கிறான். ஒவ்வொரு பயணத்திற்கு முன்பும் ஒரு புயல் வீசுகிறது. நான்கு பயணங்களுமே கலிவருக்கு அவன் வாழ்க்கையில் புதிய அனுபவங்களை யும் பார்வைக் கோணங்களையும் தருகின்றன. (இங்கிலாந்தை, ஐரோப்பாவை ஏளனம் செய்ய அவனுக்குப் புதிய வாய்ப்புகளையும் தருகின்றன!)

முதல் கடற்பயணம்

கலிவர் தன் பயணத்தின்போது கப்பல் உடைந்து லிலிபுட் என்ற தீவைச் சென்று அடைகிறான். லிலிபுட் ஆட்கள் ஐந்து அங்குலத்திற்கும் குறைவான உயரம் உள்ளவர்கள். ஆகவே அங்கு அவன் பிரம்மாண்ட ராட்சதனாகத் தென்படுகிறான். அவர்களுக்குச் சில உதவிகளையும் செய்கிறான். முக்கியமாக பிளஃபுஸ்கு என்ற அருகிலுள்ள தீவினரின் படையெடுப்பிலிருந்து காப்பாற்றுகிறான். தொடக்கத்தில் லில்லிபுட் மக்கள் மிகவும் அன்பானவர்களாகத் தென்படுகிறார்கள் என்றாலும் விரைவில் அவர்கள் மிக மோசமான, சின்னப்புத்தி கொண்ட பிராணிகளாக இருப்பதை அறிந்துகொள்கிறான். ஒரு தீயை அணைத்து ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற வேண்டி அவன் தனது சிறுநீரைப் பயன்படுத்தியதற்காக அவன் பிற “குற்றங்களுக்கிடையில்” இராஜத்துரோகக் குற்றம் சாட்டப்படுகிறான். பிளஃபுஸ்கு தீவுக்குத் தப்பிச் சென்று ஒரு படகினைக் கண்டுபிடித்துக் கடலில் போகும்போது ஒரு கப்பலினால் காப்பாற்றப்பட்டு இங்கிலாந்தை அடைகிறான்.

இரண்டாவது கடற்பயணம்

இரண்டாவது பயணத்திலும் கப்பல் ஆட்களால் கைவிடப்பட்டு ப்ராப்டிங்னாக் என்ற தீவுக்குப் போய்ச் சேர்கிறான். அங்கு வளரும் புற்களே மரமளவு உள்ளன. மனிதர் 75 அடி உயரம் இருக்கிறார்கள். லில்லிபுட்டில் உள்ள மனிதர்கள் எப்படி இவனுக்கு அளவில் மிகச் சிறியவர்களாக இருந்தார்களோ, அது போலவே இவன் இந்தத் தீவில் உள்ள இராட்சத மனிதர்களுக்கு மிகச் சிறிய பிராணியாக இருக்கிறான். தானும் லிலிபுட் மக்களுக்கு முன்பு மிக வெறுப்பூட்டும் ஒருவனாகவே இருந்திருக்க வேண்டும் என்பதும் அவனுக்குப் புரிகிறது.

அவனைக் கண்டெடுத்த மனிதன் காட்சிப் பொருளாக அவனை வைத்துப் பணம் சம்பாதிக்கிறான், பிறகு அரசியிடம் விற்றுவிடுகிறான். அவனுக்கு ஒரு சிறு பெட்டி வீடு கட்டிததரப்படுகிறது. அதை எங்கும் கொண்டுசெல்கிறார்கள். அங்குள்ள அரசனிடம் அவன் ஐரோப்பாவைப் பற்றிக் கூறும்போது அந்த அரசன் கோபமடை கிறான். அப்போதுதான் இங்கிலாந்து உண்மையில் எப்படி இருக்கிறது என்பதற்கும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குமான வேறுபாடு அவனுக்குப் புரிகிறது.

ஒருமுறை அவனைக் கடற்கரைக்குக் கொண்டுசெல்லும்போது, ஒரு கழுகு அவனிருக்கும் பெட்டியைத் தூக்கிச் சென்று கடலில் போட்டுவிடுகிறது. வழக்கம்போல் ஏதோ ஒரு கப்பலால் காப்பாற்றப்பட்டு இங்கிலாந்தை அடைகிறான்.

மூன்றாம் கடற்பயணம்

இச்சமயம் கலிவர் லாபுடா என்ற பறக்கும் தீவுக்குச் செல்கிறான். அதனால் ஆளப்படுகின்ற லக்னாக், க்ளப்டக்ட்ரிக் என்ற தீவுகளும் உள்ளன. க்ளப் டக் ட்ரிப் தீவுக்கு அவன் செல்லும் போது, அவனுக்கு இறந்தவர்களைத் திரும்ப அழைக்கும் சக்தி கிடைக்கிறது. சீஸர், ப்ரூடஸ், அரிஸ்டாடில், டே கார்ட்டே போன்றோரைச் சந்திக்கிறான். அதனால் அன்று எழுதப்பட்டுள்ள வரலாறுகள் பொய் எனத் தெரிந்து கொள்கிறான். லாபுடாவின் மக்கள் மிகுதியாகச் சிந்திப்பவர்களாகவும் பலவழி களில் சகிக்க முடியாதவர்களாகவும் உள்ளனர். பயனற்ற ஆய்வு களைச் செய்கின்றனர். அங்கே ஸ்டல்ட் ப்ரக் என்ற மக்களையும் சந்திக்கிறான். அவர்கள் முதுமை அடைந்த பின்னரும் இறப்பே இல்லாமல் உடல் பலமும் மனோபலமும் குன்றி செய்வதறியாமல் மிகுந்த சோர்வுடனேயே இருக்கிறார்கள் என்பதையும் மரணமற்ற வாழ்வு எவ்வளவு அருவருப்பானதாக இருக்கும் என்பதையும் காண்கிறான். பிறகு ஒரு வணிகனுடன் ஜப்பானுக்கு வந்து தன் நாட்டை அடைகிறான்.

நான்காம் கடற்பயணம்

நான்காம் கடற்பயணத்தில் கலிவர் ஹூய்ன்ஹ்னிம்கள் என்ற குதிரையினம் வாழ்கின்ற தீவுக்குச் சென்றுசேர்கிறான். அங்கே உள்ள குதிரைகள் பகுத்தறிவு மிக்கவையாக, பேசுகின்றவையாக உள்ளன. அங்குள்ள மக்கள் யாஹூ எனப்படுகிறார்கள். (Yahoo.com இந்தப் பெயரைத்தான் வைத்துள்ளது). அந்தக் குதிரையினத்தின் ஒழுங்கான, சீர்மையான, தூய்மையான, தொல்லையற்ற சமூகம், யாஹூ மக்களின் கெடுநோக்கும் விலங்குத்தன்மையும் கொண்ட சமூகத்திற்கு முற்றிலும் மாறாக உள்ளது. கலிவருக்கு இப்போது மனித இனத்தின் தீயகுணங்கள் அனைத்தும் புரிகின்றன. எனவே அவன் ஹூய்ன்ஹ்னிம்களோடு பல ஆண்டுகள் தங்கிவிடுகிறான். அவைகளிடத்தில் ஏற்படும் ஈடுபாட்டின் காரணமாகத் திரும்பி நாடுசெல்ல அவனுக்கு விருப்பமே இல்லாமல் போகிறது. எப்படியோ அத்தீவை விட்டுப் பிரிந்து ஒரு போர்ச்சுகீசிய கப்பலில் தன் நாட்டை அடைந்துவிடுகிறான்.

எனினும் பிற மனிதர்களை எல்லாம் யாஹூக்களாகவே கருதி அருவருப்பு அடைகிறான். அவனது குடும்பமே அவனுக்குப் பிடிக்காமல் போகிறது. எஞ்சியுள்ள நாட்களைத் தனிமையிலும், குதிரைகளுடன் பேசிக்கொண்டும் கழிக்கிறான்.

மனித இனத்தின் முரணுண்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த அங்கதக் கதையாக இது நோக்கப்படுகிறது.

லாபுடாவின் பயனற்ற அறிவியல் ஆய்வுகள் இன்றும் நமது மனித இனத்தின் (அமெரிக்க, ஐரோப்பிய, நாசா ஆய்வுகள் போன்ற) பயனற்ற ஆய்வுகளை கேலி செய்வனவாக உள்ளன.

ஐரோப்பிய அரசாங்கங்கள் அனைத்தையும் கடுமையாக விமரிசனம் செய்து சாடுகிறார். மனிதன் இயல்பாகவே கெட்டவனா, அன்றி கெட்டவனாக ஆக்கப் படுகிறானா என்றும் ஆராய்கிறார்.

கலிவர் பயணத்தின் ஒவ்வொரு பகுதியும் முன்னதற்கு முரணாக அமைகிறது. உதாரணமாக, கலிவர் தன் நான்கு பயணங்களினூடே வரிசையாக பெரியவனாக>  சிறியவனாக> அறிவுள்ளவனாக> அறிவற்றவனாக மாறுகிறான். அவன் பார்வை யிலும் ஐரோப்பிய மக்கள் இனம் முதலில் சிறந்த, ஆற்றலுடைய, அழகிய ஒன்றாக இருந்த நிலை போகப்போக மாறி, இறுதியில் கெடுநோக்கு மட்டுமே கொண்ட, அருவருப்பான, இழிவான யாஹு இனமாக மாறிப் போகிறது.

எனினும் இத்தகைய அறிவுக்கூர்மை கொண்ட விவாத வாசகச் சிக்கல் தன்மைகள் எதுவுமின்றி, இன்றுவரை சிறார்க்கு ஏற்ற கதையாக கலிவரின் லிலிபுட் பயணக்கதை மட்டும் (மிகச் சில சமயங்களில் ப்ராப்டிங்னாகும் சேர்த்து) பிரசுரம் செய்யப்பட்டுள்ளது என்பதுதான் இதன் சிறப்பாகும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
  2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
  3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
  4. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
  5. பரஜன் - க. பூரணச்சந்திரன்
  6. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
  7. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
  8. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
  9. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
  10. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
  11. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
  12. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
  13. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
  14. உடோபியா - க. பூரணச்சந்திரன்
  15. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
  16. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
  17. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
  18. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
  19. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
  20. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
  21. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
  22. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
  23. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
  24. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
  25. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
  26. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
  27. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
  28. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
  29. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
  30. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
  31. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
  32. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
  33. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
  34. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
  35. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
  36. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
  37. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
  38.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
  39. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
  40. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
  41. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
  42. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
  43. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
  44. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
  45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
  46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
  47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
  48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
  49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்