தமிழுக்கு இப்பால்!

பிரதாப முதலியார் சரித்திரம்

“எப்போதும் ‘அப்பால்’ மட்டுமே பார்க்கவேண்டுமா, ‘இப்பாலும்’ பார்த்தால் என்ன? தமிழில் உள்ள நல்ல படைப்புகளைப் பற்றியும் இந்தத் தொடரில் எழுதினால் என்ன?” என்று சில நண்பர்கள் கேட்டார்கள். சரி என்றேன். தமிழில் படித்த கதைகள் ஏராளம். எதைப் பற்றி முதலில் எழுதுவது? தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரம் பற்றியே எழுதலாமே…ஒன்றரை நூற்றாண்டுக்குமுன் வெளிவந்த அது இப்போது பலருக்கும் புதியதாகத்தானே இருக்கும்!

ஆங்கிலக் கதைகளை நான் பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்க நேர்ந்தது. தமிழின் கதை வேறு. என் அம்மாதான் இதில் எனக்கு முன்னோடி. அவர்கள் நான்காவது படித்து அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டார்களாம். ஆனால் படிப்பதை நிறுத்தவில்லை. பதின்மூன்று வயதில் திருமணமாகி புருஷன் வீட்டுக்கு வந்துவிட்டாலும் கையில் கிடைத்த கதைகளை எல்லாம் படிப்பது அவர்கள் வழக்கம். என் தந்தையும் ஊரில் உள்ள நூலகங்களில் எல்லாம் உறுப்பினராகி, என் தாயார் கேட்ட கதைப் புத்தகங்களை எல்லாம் வாங்கி வந்து கொடுத்தார். ஆக நான் பிறந்து ஐந்தாறு வயது ஆவதற்குள், என் அம்மா அக்கால நாவல்களை எல்லாம் தீர்த்துக் கட்டிவிட்டார்.

புலி எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி அல்லவா? அதனால் நானும் சிறு வயதிலிருந்தே கதைகள் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுவிட்டேன். நான் முதன் முதலில் படித்தது கல்கியின் சிவகாமியைத் தான். இருந்தாலும் சில காலத்துக்குள்ளாகவே பிரதாப முதலியார் சரித்திரம், கோகிலாம்பாள் கடிதங்கள், கமலாம்பாள் என்று ஆரம்பித்து விட்டேன். இப்படித் தரமான(!) நாவல்களில் தொடங்கினாலும் எனக்குப் பிடித்தவை என்னவோ அக்காலத் துப்பறியும் நாவல்கள்தான். ஜே. ஆர். ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்று. இடையில் வை. மு. கோதைநாயகி அம்மாளுடைய நாவல்கள். இவை பெரும்பாலும் குடும்பக் கதைகளாக இருந்தாலும் எல்லாவற்றிலும் துப்பறியும் கதைகளின் சுவையும் தேசபக்தியின் மணமும் நிறைய அறிவுரையும் இருக்கும். கல்லூரி சேர்ந்த காலத்தில்தான் மு.வ., நா. பார்த்தசாரதி, அகிலன் என்று பழக்கமானார்கள்.

பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர் மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை. சத்தியபுரி என்ற ஊரில் வாழ்ந்த பிரதாப முதலியார், நன் மதிப்புள்ள பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது சிறுவயது முதல் கதை தொடங்குகிறது.

இந்தக் கதையை வசதிக்காக நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

  1. முதல் பகுதி பிறப்பு வளர்ப்புப் படலம். இதில் பிரதாப முதலியும் அவன் தாய்மாமன் மகள் ஞானாம்பாளும் கனகசபை என்ற பையன் ஒருவனும் சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்தும் படித்தும் வருகின்றனர். பின்னர் கனகசபை ஒரு ஊருக்கே அதிபதி என்று தெரிய வருகிறது. பிரதாபனும் ஞானாம்பாளும் ஒருவரை ஒருவர் நேசித்து வளர்கின்றனர்.
  2. இரண்டாம் பகுதி திருமணப் படலம். பிரதாபனுக்கு திருமணம் பேசுகிறார் அவன் தந்தை. ஞானாம்பாளின் தந்தை சம்பந்தி முதலியார் திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை தன் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று சொல்ல, திருமணம் முறிந்துவிடுகிறது.

பிறகு சம்பந்தி முதலியார் தன் பெண்ணுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையும், பிரதாபனின் தந்தை வேறு ஒரு பெண்ணையும் பார்த்து ஏற்பாடு செய்கிறார்கள். ஏட்டிக்குப் போட்டியாக இருவரும் ஒரே ஊரில் ஒரே நாளில் ஒரே வீட்டில் திருமணங்களை ஏற்பாடு செய்கிறார்கள்! ஆனால் பிரதாபன்-ஞானாம்பாள் இரு வீட்டாருமே திருமணத்தைத் திடீரெனத் தள்ளி வைக்க நேர்கிறது. இந்தச் செய்தி தெரியாமல் இவர்கள் பார்த்த மற்ற மாப்பிள்ளை, பெண் வீட்டார்கள் அந்த வீட்டுக்கு வந்துவிட, அவர்களுக்குள் திருமணம் முடிந்துவிடுகிறது.

இடையில் ஞானாம்பாளை ஒருவன் கடத்திச்செல்ல, பிரதாபன் அவளைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறான். பிறகு தடை ஏது? இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

மூன்றாம் பகுதி ஓடிப்போய் ஒன்றுசேர்ந்த படலம். ஞானாம்பாள் கருவுறுகிறாள். ஆண் குழந்தை பிறந்தால் தனக்கு சுவீகாரம் கொடுக்க வேண்டும் என்று சம்பந்தி முதலியார் கேட்க, பிரதாபன் தந்தை மறுக்க, தம்பதியர் பிரிகின்றனர். குழந்தையும் பிறக்காமல் போகிறது, ஞானாம்பாள் நோயுறுகிறாள். பிரிவு நீண்டுகொண்டே செல்கிறது. பிறகு கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு ஊர்களிலிருந்தாலும், திட்டமிட்டு ஒன்றாக ஓடிவிடுகின்றனர். வழியில் கனகசபையின் தந்தை தேவராஜ பிள்ளை ஆட்சி செய்கின்ற ஆதியூருக்கு வருகின்றனர். அங்கு தங்களைப் பிரிந்து தவித்திருந்த தாய்தந்தையருடன் ஒன்று சேர்கின்றனர். கதை இத்துடன் முடிந்திருக்க வேண்டியதுதானே?

நான்காம் பகுதி ஆட்சிப்படலம். ஆதியூரிலிருந்து வேட்டை காணச்சென்ற பிரபதாப முதலியை ஒரு யானை தூக்கிச் சென்று வேற்று நாட்டருகில் விட்டுவிடுகிறது. அந்நாட்டில் பிரதாப முதலி பல துன்பங்களையும் அனுபவித்து சிறையில் இருக்கிறான். அவனைத் தேடி ஆண்வேடத்தில் வந்த ஞானாம்பாள் அந்நாட்டின் அரசன் ஆகிறாள். அவள் பிரதாபனை விடுவிக்கிறாள், இருவரும் சில நாள் அவ்வூரை ஆட்சி செய்கின்றனர். அந்நாட்டின் பழைய அரசன் மகளாகிய ஆனந்தவல்லியைக் கண்டுபிடித்து அவளுக்கு முடிசூட்டுகிறாள் ஞானாம்பாள். பிறகு அனைவரும் தத்தம் ஊர்களுக்குத் திரும்பி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

இக்கதையைப் படிக்கும்போது, அது ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட சம்பவங்களைப் பற்றிப் பேசுகிறதா, இக்கால நிலைமைகளைப் பற்றிச் சொல்லுகிறதா என்று படிப்போர்க்குச் சந்தேகமே ஏற்பட்டுவிடும்.

உதாரணமாக, ஒரு திருடனைப் பிடித்து தேவராஜ பிள்ளை விசாரிக்கும் போது, அவன் “நான் ஒரு ரூபாய் திருடினேன், ஒப்புக் கொள்கிறேன், ஆனால் அரசாங்கத்திலிருந்து இலட்சக் கணக்கான ரூபாய்களைத் திருடிக் கொண்டு ஓடிப்போய் விடுகிறார்களே, அவர்களுக்கு என்ன தண்டனை? இன்னும் அரசாங்கமே மக்களைத் திருடுகின்றதே அதற்கு என்ன தண்டனை?” என்று கேட்கிறான். அவன் பேசும் வாதங்களைக் கேட்கும் போது இன்று நம் நாட்டில் வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் திருடிக் கொண்டு வெளிநாடுகளில் ஓடிப்போயிருக்கின்ற பல பேர்களும், ஊழலாட்சி புரிகின்ற தலைவர்களும் நம் நினைவுக்கு வருகின்றனர். இன்னும் இது போன்ற சம்பவங்கள் பலவற்றை வாசகர்கள் தாங்களே படித்து அனுபவிக்கத்தான் வேண்டும்.

இந்தக் கதையின் அறிவுக் கூர்மை மிக்க மாந்தரும், ஆண்களைப் பலவேறு சங்கடங்களிலிருந்தும் காப்பாற்றுபவர்களும் பிரதாபனின் தாயாரான சுந்தரத்தண்ணியும் அவன் மனைவி ஞானாம்பாளுமே. தமிழின் முதற் காவியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை பெண்ணின் பெருமை பேசுவனவாக அமைந்தன. அந்த மரபு மாறாமல் இந்த ‘ஞானாம்பாள் சரித்திரமும்’ பெண்ணின் பெருமை உரைப்பதாகவே அமைவது குறிப்பிடத் தக்கது.

நாவலின் நடை சற்றே பழையதாக இருந்தாலும் நம்மைச் சிரமப் படுத்துவ தில்லை. இதற்கு ஒரு ஆங்கில முன்னுரை அளித்துள்ளார் வேதநாயகர். அதில் யதார்த்தப் பாணியைப் பின்பற்றாமல், டாக்டர் ஜான்சனைப் பின்பற்றி அறமுரைத்தலையே இலக்காகக் கொண்டு எழுதியதாகச் சொல்கிறார். ஆனால் நாவல் என்னும்படி இன்றி, “எங்கெங்குக் காணினும் கதைகளடா”…என்னும்படி எண்ணற்ற கதைகளின் தொகுப்பாகவே இது அமைந்திருக்கிறது. ஒரு கதைக் களஞ்சியத்தையே முதல் நாவல் என நமக்களித்த வேதநாயகம் பிள்ளை நம் நினைவில் என்றென்றும் நிற்பார்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
  2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
  3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
  4. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
  5. பரஜன் - க. பூரணச்சந்திரன்
  6. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
  7. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
  8. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
  9. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
  10. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
  11. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
  12. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
  13. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
  14. உடோபியா - க. பூரணச்சந்திரன்
  15. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
  16. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
  17. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
  18. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
  19. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
  20. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
  21. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
  22. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
  23. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
  24. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
  25. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
  26. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
  27. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
  28. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
  29. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
  30. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
  31. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
  32. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
  33. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
  34. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
  35. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
  36. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
  37. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
  38.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
  39. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
  40. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
  41. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
  42. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
  43. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
  44. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
  45. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
  46. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
  47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
  48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
  49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்