தமிழுக்கு அப்பால் -21

 (சீவக சிந்தாமணி)

தமிழின் முதற்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி யாவுமே அவைதிகக் காப்பியங்கள். அதாவது, சைவ, வைணவ மதங்களையோ பிற வைதிக மதங்களையோ சார்ந்தவை அல்ல. அவற்றில் மூன்று ஜைனக் காப்பியங்கள், இரண்டு பெளத்தக் காப்பியங்கள். ஆனால் அவற்றில் முதலிரு கதைகள் மட்டுமே தமிழ் மண்ணில் விளைந்தவை. பிற வடநாட்டிலிருந்து இறக்குமதி ஆனவை. தமிழின் மூன்றாவது காப்பியமான சீவக சிந்தாமணியும் வடக்கில் விளைந்த கதையே. இக்காப்பியத்தை எழுதியவர் திருத்தக்க தேவர்.

இதன் கதைத் தலைவன் பிறந்தவுடனே ஒரு தெய்வம் “ஜீவ” (வாழ்க) என வாழ்த்துகிறது. எனவே அவன் ஜீவகன் (சீவகன்) எனப்படுகிறான். அவனைச் “சிந்தாமணியே” எனக் கொஞ்சுகிறாள் அவன் தாய். எனவே காப்பியப் பெயர் சீவக சிந்தாமணி ஆகிறது.

இராசமாபுரத்தில் வசிக்கும் சச்சந்தன் ஏமாங்கத நாட்டுக்கு அரசன். அவன் மனைவி விசயை. சச்சந்தன் திருமணமானதுடன் தன் மனைவியோடு இடையறாதிருந்து இன்பம் துய்க்க எண்ணம் கொண்டு, கட்டியங்காரன் என்ற அமைச்சனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கிறான். அவன் தீய எண்ணம் கொண்டவன். தானே அரசனாக விழைந்து, அந்தப்புரத்திலிருந்த அரசன்மீதே போர் தொடுக்கிறான். சச்சந்தன், நிறைகர்ப்பமாக இருந்த தன் மனைவியை ஒரு மயில் வடிவச் சிறு விமானத்தில் ஏற்றி அனுப்பி விட்டுப் போரில் உயிர் துறக்கிறான்.

விமானம் அருகிலுள்ள ஒரு சுடுகாட்டில் இறங்குகிறது. அங்கு விசயைக்குக் குழந்தை பிறக்கிறது. ஒரு தெய்வத்தின் உதவியால் கந்துக்கடன் என்ற பெருவணிகன் குழந்தையாக இருந்த சீவகனைக் கொண்டுசென்று வளர்க்கிறான். பின்னர் அவனுக்கே நந்தட்டன் என்ற ஆண் குழந்தையும் பிறக்கிறது. சீவகனுக்குப் பலவிதக் கலைகளையும், கல்வியையும் அச்சணந்தி என்ற முனிவர் வாயிலாகக் கற்பிக்கிறான் கந்துக்கடன். சீவகனின் பூர்விகத்தையும் அச்சணந்தி எடுத்துரைக்கிறார்.

சீவகனுக்குப் பல நல்ல நண்பர்கள் வாய்க்கின்றனர். அவர்களில் பதுமுகன் முதன்மையானவன். அச்சமயத்தில் வேடுவர் பலர் ஊரில் புகுந்து ஆயிரக் கணக்கான பசுக்களைக் கவர்ந்து செல்கின்றனர். கட்டியங்காரனின் படை அவர்களிடம் தோல்வியடைகிறது. தன் பசுக்களை மீட்டுத் தருபவர்களுக் குத் தன் மகள் கோவிந்தையையும் 2000 பசுக்களையும் அளிப்பதாக ஆயர்தலைவன் நந்தக்கோன் அறிவிக்கிறான். சீவகன் தன் நண்பர்களுடன் சென்று வேடர்களை வென்று பசுக்களை மீட்டுத் தருகிறான். நந்தக்கோனின் மகளைத் தன் நண்பன் பதுமுகனுக்குத் திருமணம் செய்துவைக்கிறான்.

கலுழவேகன் என்பவன் ஒரு வித்யாதரன். அவனுக்கு காந்தர்வ தத்தை என்று கலைவல்ல மகள் ஒருத்தி. அவன் இராசமாபுரத்தில் ஒரு வீணைப் போட்டி ஏற்பாடு செய்கிறான். வீணையில் தன் மகளை வெல்பவனுக்கு அவளை அளிப்பதாக அவன் அறிவிக்கிறான். சீவகன் வீணைப்போட்டியில் அவளை வென்று பரிசாகப் பெறுகிறான். இச்செயல் கட்டியங்காரனிடம் பொறாமையையும் பகைமையையும் தூண்டுகிறது.

இராசமாபுரத்தில் குணமாலை-சுரமஞ்சரி எனத் தோழியர் இருவர். அவரகளுக்குள் தங்களில் எவருடைய சுண்ணம் சிறப்பு வாய்ந்தது என்ற போட்டி எழுகிறது. சீவகனிடம் கொண்டு செல்கிறார்கள். குணமாலையின் சுண்ணமே சிறந்தது என்று தீர்ப்புரைக்கிறான். பிறகு குணமாலையை மதம்பிடித்த பட்டத்து யானையிடம் இருந்து சீவகன் காப்பாற்றுகிறான்.  இருவருக்கும் திருமணம் நிகழ்கிறது. பட்டத்து யானைக்குத் தீங்கு செய்தான் என்று கட்டியங்காரன் சீவகனைக் கொல்லப் படைவீரரை ஏவுகிறான். அவர்கள் இடையில் இருந்து சீவகனை சுதஞ்சணன் என்ற வித்யாதர நண்பன் காப்பாற்றி எடுத்துச் செல்கிறான்.

அவனிடமிருந்து பல ஊர்களையும் காண்பதாக விடைபெறும் சீவகன், பல்லவ தேசத்தில் சந்திராபம் என்ற ஊரை அடைகிறான். அந்நாட்டு அரசனின் மகள் பதுமையைப் பாம்பு தீண்டிவிட்டதாக அறிந்து அவளுக்கு சிகிச்சை செய்து காப்பாற்றுகிறான். அதனால் இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அவளை மணம் செய்துகொள்கிறான். ஆனால் உடனே அவளுக்குச் சொல்லாமலே அவளைவிட்டு நீங்கி, தக்க நாட்டில் கேமமாபுரம் என்ற ஊரை அடைகிறான்.

அங்கு வணிகனான சுபத்திரன் என்பவன் மகள் கேமசரியை மணம் புரிந்து கொள்கிறான். பின்னர் அவளுக்கும் கூறாமல் அவளைப் பிரிந்து மத்திம தேசத்தை அடைகிறான். அதன் தலைநகரான ஏமாமாபுரத்திற்குச் செல்கிறான். அங்குள்ள அரசனின்ஐந்து மைந்தர்களுக்கும் வில்வித்தை பயிற்றுவித்து, அவர்களின் தங்கையான கனகமாலையை மணம் புரிகிறான். அதற்குள் காந்தர்வ தத்தையின் உதவியால் அவனைத் தேடிக் கொண்டு நந்தட்டன் வந்தான்.

பிறகு பதுமுகன் ஆகிய துணைவர் அனைவரும் சீவகனைத் தேடிவந்தனர். சீவகன் தாய் விசயை தண்டகாரணியத்தில் ஒரு தவப்பள்ளியில் இருக்கிறாள், அவனைக் காண ஆவல் கொண்டுள்ளாள் என்ற செய்தியையும் தெரிவித்தனர். அதனால் கனகமாலையிடம் விடைபெற்று, அவர்களுடன் விசயையைக் காணச் சென்றான். அவள் அறிவுரை பல கூறியதுடன், கட்டியங்காரனை வெல்லத் தன் சகோதரன் கோவிந்தராசனின் உதவியைப் பெறுமாறும் கூறினாள்.

பின்னர் பயணத்தைத் தொடர்ந்த சீவகன், இராசமாபுரத்துக்குத் திரும்புகிறான். அவன் ஒரு கடையில் அமர்ந்தவுடனே அங்கு விற்காத பலநாட் பொருட்கள் விற்றுப்போயின. கடையின் உரிமையாளன், சாகரதத்தன் மகள் விமலை. பந்தாடிக் கொண்டிருந்த அவள் சீவகனைக் கண்டு காதல் கொண்டாள். அவளையும் சீவகன் மணம் புரிகிறான்.

இராசமாபுரத்தில் சுரமஞ்சரி ஒரு கன்னிமாடத்தில் அவனுக்காகத் தவமிருந்துகொண்டிருக்கிறாள். கிழவனாக உருவம் மாறிக் கன்னிமாடத்திற்குள் செல்கிறான் சீவகன். அங்கு வீணை வாசித்து சுரமஞ்சரியை மயக்கிக் காமன் கோயிலுக்கு வரச் செய்கிறான். அவள் வழிபடும்போது அசரீரியாக உன் காதலனைக் காண்பாய் என நண்பனை விட்டுக் கூறச் செய்கிறான். அவள் எதிரில் சீவகன் செல்ல, இருவரும் ஒன்றாகின்றனர்.

பின்னர் கந்துக்கடனிடம் விடைபெற்று, தன் மாமன் விதேய நாட்டரசன் கோவிந்தனைக் காணச் செல்கிறான். அவன் மகள் இலக்கணையை மணக்க வேண்டுமாயின் திரிபன்றிச் சக்கரம் சுழலும்போது அப்பன்றியை வீழ்த்தவேண்டும் என்று அறிவிக்கிறான் கோவிந்தன். அப்பன்றிகளை அடித்தபின் கட்டியங்காரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்று தன் நாட்டைப் பெற்றான். பிறகு இலக்கணையை மணம் புரிந்தான்.

பின்னர் பல ஆண்டுகள் நல்லாட்சி புரிந்து, தன் நாட்டைத் தன் மகன் சச்சந்தனுக்கு அளித்தான். அச்சணந்தி முனிவர் அவனுக்கு நிலையாமையை எடுத்துரைக்கிறார்.

ஒரு நாள் சோலையில் குடும்பத்துடன் களித்திருக்கிறான். அங்கு ஓர் ஆண் குரங்கு பலாப்பழம் ஒன்றைப் பறித்து தன் பெண்குரங்கிற்குத் தருகிறது. ஆனால் அதை அந்தத் தோட்டத்தின் காவல்காரன் பறித்துத் தின்கிறான். இப்படித்தான் சச்சந்தனின் அரசுரிமையைக் கட்டியங்காரன் பறித்துக் கொள்ள, அவனிடமிருந்து தான் நாட்டைக் கைப்பற்றியதை நினைவுகூர்கிறான் சீவகன். மாற்றங்கள் நிகழ்வதும் நிலையாமையும் உலகியல்பு என்பதை உணர்ந்து உடனே துறவு பூணுகின்றான். தவமிருந்து இறுதியாக முக்தி மங்கையையும் அடைகின்றான்.

நாமகளாகிய கலைமகளை அடைவதில் தொடங்கிய அவன் வாழ்க்கை, காந்தர்வ தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை என்ற எட்டுப் பெண்களையும் தனக்குரிய மண்மகளையும் பெற்று, பத்தாவதாக முக்தி என்ற பெண்ணையும் அடைவதில் முடிகிறது. இவ்வாறு நூல் முழுவதுமே சீவகன் பெண்களை மணமுடிப்பதாகக் காட்டுவதால் இதை (திரு)மண நூல் என்று பழங்காலத்தில் அழைத்தார்கள்.

நிலையாமையே உண்மை, முக்தியே சிறந்த நெறி என்பதை அறிவிக்கத் திருத்தக்க தேவர் கொண்ட பாதை நெடியது. இதற்கு இவ்வளவு சிற்றின்ப மயமான கதையைப் படைக்க வேண்டுமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

இக்காப்பியம் விருத்தப்பாக்களால் ஆனது. இதுவே கம்ப ராமாயணத்தினை விருத்தப்பாவில் இயற்றக் கம்பருக்குத் துணிவும் அளித்தது. பலவிதங்களிலும் கம்பரின் முன்னோடியான திருத்தக்க தேவர் தமிழிலக்கியம் உள்ளளவும் வாழ்வார்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
  2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
  3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
  4. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
  5. பரஜன் - க. பூரணச்சந்திரன்
  6. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
  7. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
  8. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
  9. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
  10. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
  11. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
  12. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
  13. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
  14. உடோபியா - க. பூரணச்சந்திரன்
  15. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
  16. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
  17. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
  18. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
  19. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
  20. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
  21. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
  22. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
  23. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
  24. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
  25. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
  26. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
  27. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
  28. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
  29. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
  30. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
  31. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
  32. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
  33. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
  34. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
  35. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
  36. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
  37.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
  38. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
  39. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
  40. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
  41. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
  42. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
  43. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
  44. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
  45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
  46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
  47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
  48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
  49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்