தமிழுக்கு அப்பால் 44

The Great Gatsby என்பது ஸ்காட் ஃபிட்ஜெரால்ட் என்ற அமெரிக்க ஆசிரியரின் புகழ் பெற்ற நாவல் மட்டுமல்ல, இன்றுவரை தொடர்ந்து படிக்கப்படும் நாவலும்கூட. ஃபிட்ஜெரால்ட் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். இந்த நாவல் 1925இல் வெளியாயிற்று.

1922 கோடையில் நிக் கேரவே என்பவன் மின்னசோடாவிலிருந்து நியூயார்க்கிற்கு பத்திர விற்பனையாளனாகப் பணி புரிவதற்கெனக் குடி பெயர்கிறான். வெஸ்ட்-எக் என்னுமிடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறான். அது புதுப் பணக்காரர்கள் வாழும் பகுதி. அவனுக்கு ஈஸ்ட்-எக் பகுதியுடன் தொடர்பிருக்கிறது. அது பழைய பணக்காரர்கள் வாழுமிடம். இருவிதப் பணக்காரர்களுக்கும் இடையில் மனப்பாங்கிலும் தாங்கள் கொள்ளும் மரியாதையிலும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

அங்கு அவன் உறவினள் டெய்சியும் அவள் கணவன் டாம் பக்கனனும் வசிக்கிறார்கள். டாம், யேல் பல்கலைக்கழகத்தில் நிக்கின் வகுப்புத் தோழனும்கூட. அங்கு ஜார்டன் பேக்கர் என்னும் கோல்ஃப் விளையாட்டுக்காரியை நிக் சந்திக்கிறான். டாம் திருமண உறவுக்கு அப்பால் ஒரு தொடர்பு வைத்திருப்பதாக அவள் சொல்கிறாள். வீட்டுக்குத் திரும்பிய பிறகு நிக் தனது அண்டைவீட்டுக்காரன் ஜே கேட்ஸ்பியைக் காண்கிறான். இருளில் அவன் லாங் தீவுப்பகுதியை நோக்கிக் கையை நீட்டியவாறு தென்படுகிறான். ஆனால் அங்கு பச்சை நிற ஒளியைத் தவிர வேறொன்றும் புலப்படவில்லை.

சிலநாள் கழித்து டாம் நிக்கை நியூ யார்க்கில் ஒரு விருந்திற்கு அழைக்கிறான். வழியில் டாம் தன் தொடுப்புக்காரியான மிர்ட்டில் வில்சன் என்பவளை அழைத்துக் கொள்கிறான். அவள் ஜார்ஜ் வில்சன் என்பவனின் மனைவி. வில்சன் ஒரு ஆட்டோ-கடை நடத்துகிறான், அது ஏழைகள் வாழும் ஆஷ்-வேலி என்ற குப்பை மேட்டுப் பகுதியில் இருக்கிறது.

பார்ட்டியில் மிர்ட்டில் குடித்துவிட்டு டெய்சியைக் கிண்டல் செய்கிறாள். டாம் அவளை முகத்தில் குத்தி மூக்கை உடைத்துவிடுகிறான்.

கேட்ஸ்பி, மிக ஊதாரித்தனமான விருந்துகளைச் சனிக்கிழமை இரவுகள் தோறும் நடத்துகிறான். அதில் ஒன்றில் கலந்துகொள்ளும் நிக், ஜார்டனைச் சந்திக்கிறான். கேட்ஸ்பியையும் நேருக்குநேர் முதன்முதலாகப் பார்க்கிறான். கேட்ஸ்பி, ஜார்டனிடம் தன் அந்தரங்கக் கதையைச் சொல்கிறான். அவன் முதல் உலகப் போருக்கு முன்னாலேயே டெய்சியைச் சந்தித்துக் காதல் கொண்டவன். அவளருகிலேயே இருக்கவும் அவளைக் காண்பதற்காகவுமே அவன் வெஸ்ட்எக் பகுதியில் இந்த மாளிகையை வாங்கியிருக்கிறான். கேட்ஸ்பியின் வேண்டுகோளுக்கிணங்க, டெய்சியுடன் ஒரு சந்திப்பை கேட்ஸ்பி நிகழ்த்த நிக் ஏற்பாடு செய்கிறான். சந்தித்தவுடன் அவர்கள் இருவரின் காதலும் மீண்டும் துளிர்த்து விடுகிறது.

டெய்சியைச் சந்திப்பதற்காகவே சனிக்கிழமை விருந்துகள் நடத்தப் பட்டன. அவளைப் பார்த்துவிட்டதால் கேட்ஸ்பி தன் சனிக்கிழமை விருந்துகளை நிறுத்திவிடுகிறான்.

தன்னுடனும், டாம், ஜார்டனுடனும் நிக்கையும் கேட்ஸ்பியையும் விருந்துக்கு வருமாறு டெய்சி அழைக்கிறாள். அவளுக்கும் கேட்ஸ்பிக்கும் இடையில் உள்ள ஆழ்ந்த அன்பை நிக் அறிகிறான். ஒரு நாள் நியூ யார்க்கிற்கு அனைவரும் செல்கின்றனர். அங்கு பிளாசா ஹோட்டலில் டாமுக்கும் கேட்ஸ்பிக்கும் டெய்சி சம்பந்தாக வாய்ச்சண்டை ஏற்பட்டு விடுகிறது. தன்னை மட்டுமே டெய்சி நேசிப்பதாகவும் அவள் ஒருபோதும் டாமை விரும்பியதில்லை என்றும் கேட்ஸ்பி சொல்கிறான். ஆனால் டெய்சி இருவரையுமே விரும்புவதாகச் சொல்கிறாள். அதனால் கேட்ஸ்பி அதிர்ச்சி யடைகிறான். கேட்ஸ்பி ஒரு கள்ளச்சாராயக்காரன் என்றும் அதனால்தான் பணம் சேர்த்தான் என்றும் டாம் இழிவுபடுத்துகிறான். பிறகு டெய்சியை கேட்ஸ்பியுடன் அனுப்பிவிடுகிறான். சற்று நேரம் கழித்து டாம், நிக், ஜார்டன் எல்லாரும் கிளம்புகின்றனர்.

டாம் கேட்ஸ்பி அளவுக்குப் பணக்காரன் அல்ல என்றாலும் அவனிடம் குலப்பெருமை அளவுக்குமீறி இருக்கிறது. கேட்ஸ்பி ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவன். எப்படியாவது முன்னேற வேண்டும், பணம் சேர்க்க வேண்டும், குறிப்பாக டெய்சியை அதைக் கொண்டு அடைய வேண்டும் என்னும் எண்ணம் படைத்தவனாக இருக்கிறான். டாமிடம் இல்லாத உண்மையும் நேர்மையும் காதலும் கேட்ஸ்பியிடம் இருக்கின்றன.

அவர்கள் வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஒரு விபத்து நேரிடுகிறது. மிர்ட்டில் ஒரு காரில் அடிபட்டு இறந்துவிடுகிறாள். தங்களுக்கு முன் சென்ற கேட்ஸ்பிதான் காரைச் செலுத்தியவன், தன் காதலி மிர்ட்டில் மீது மோதியவன் என்று டாம் நினைக்கிறான். கேட்ஸ்பி யிடமிருந்து டெய்சிதான் உண்மையில் காரைச் செலுத்தி வந்தவள், மிர்ட்டில்மீது மோதியவள் என்று நிக்கிற்குத் தெரியவருகிறது. ஆனால், பழியைத் தான் ஏற்றுக்கொள்ள கேட்ஸ்பி தயாராக இருக்கிறான்.

ஜார்ஜ் வில்சன் தன் மனைவி மீது காரைச் செலுத்தியவன் கேட்ஸ்பி என்று நினைத்துப் பழிவாங்க நினைக்கிறான். அதனால் கேட்ஸ்பியைச் சுட்டுக் கொன்று விட்டுத் தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறான். மாலையில் நிக் செல்லும்போது இருவர் பிணங்களையும் காண்கிறான்.

டெய்சியும் டாமும் வேற்றிடத்திற்கு ஓடிவிடுகின்றனர். கேட்ஸ்பியின் இறுதிச் சடங்கைக் கூட நிக் மட்டுமே ஏற்பாடு செய்யவேண்டியதாகிறது. கேட்ஸ்பியின் பணக்கார நண்பர்கள்–அவன் அளித்த விருந்துகளில் கலந்துகொண்டவர்கள்-அதுவரை அவனைக் கொண்டாடியவர்கள் ஒருவரும் ஈமச் சடங்கிற்கு வரவில்லை. கேட்ஸ்பியின் தந்தையும் வேறொருவரும் மட்டுமே சடங்கில் பங்கேற்கின்றனர்.

ஜார்டனுடன் நிக் உறவை முறித்துக்கொள்கிறான். அடுத்த முறை  டாமை அவன் சந்திக்கும்போது ஜார்ஜிடம் மிர்ட்டிலைக் கொன்றவன் கேட்ஸ்பி என்று “போட்டுக் கொடுத்தவன்” டாம்தான் என்று தெரியவருகிறது. உண்மையில் மிர்ட்டில் மீது கார் ஏற்றிக் கொன்றவள் டெய்சிதான் என்ற உண்மையை நிக் அவனிடம் கூறவேயில்லை.

நியூ யார்க் வாழ்க்கையின் இசைகேடான நிலை, வெறுமை ஆகியவற்றை ஆழ்ந்து உணரும் நிக், திரும்ப மின்னசோட்டாவுக்கே போக முடிவுசெய்கிறான். அதற்கு முன்னாளிரவு முன்பு கேட்ஸ்பி நின்றவாறு லாங் தீவைப் பார்த்த இடத்தில் சென்று நோக்குகிறான். அமெரிக்காவின் முதல் குடியேறிகளுடன் கேட்ஸ்பியை ஒப்பிட்டுப் பார்க்கிறான். அவர்களுக்கும் மேற்கத்தியக் கனவு என ஒன்று இருந்தது. பழமையின் நீரோட்டத்தை எதிர்த்து முன்னோக்கிச் செல்லும் படகுகளைப் போல, கேட்ஸ்பியைப் போல, பரந்து விரிந்த கைகளுடன் எல்லாரும் எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டியதுதான் போலும் என்று எண்ணுகிறான். கேட்ஸ்பிக்கு எப்படியாயினும் தன் கனவுகளை நனவாக மாற்றும் சக்தி இருந்தது என்றாலும், “எல்லாருமே அவரவர் பாணியில் (குறிப்பாகப் பணம் சேர்ப்பதில்) வெற்றி பெற்றாக வேண்டும்” என்ற “அமெரிக்கக் கனவு” முடிவுக்கு வந்ததைப் போல, கேட்ஸ்பியின் கனவும் முடிவுக்கு வந்துவிட்டது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
  2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
  3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
  4. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
  5. பரஜன் - க. பூரணச்சந்திரன்
  6. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
  7. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
  8. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
  9. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
  10. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
  11. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
  12. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
  13. உடோபியா - க. பூரணச்சந்திரன்
  14. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
  15. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
  16. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
  17. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
  18. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
  19. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
  20. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
  21. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
  22. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
  23. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
  24. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
  25. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
  26. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
  27. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
  28. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
  29. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
  30. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
  31. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
  32. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
  33. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
  34. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
  35. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
  36. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
  37.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
  38. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
  39. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
  40. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
  41. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
  42. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
  43. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
  44. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
  45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
  46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
  47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
  48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
  49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்