தமிழுக்கு அப்பால் -14

மீண்டும் நாம் பழைய ஆங்கில நாவல்களுக்குத் திரும்புவோம். ஒரு 150 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்.

டிரெஷர் ஐலண்ட் (புதையல் தீவு) என்ற கதை சிறார்களுக்கிடையில் மிகப் பிரசித்தமானது. எழுதப்பட்ட 1881 முதலாக இன்றுவரை தொடர்ச்சியான வரவேற்பு அதற்கு உலக முழுவதிலும் கிடைத்துள்ளது.

சில தமிழ்த் திரைப்படங்களில்கூட, கையில் ஒரு பாதி வரைபடத்தை (மேப்பை) வைத்துக் கொண்டு ஒரு குழு புதையலைத் தேடி அலைவதைப் பார்க்கலாம். மேப்பின் மீதிப்பாதி எதிரிக் குழுவிடம் இருக்கும். (கடைசியாக இதை நான் பார்த்தது இரும்புக்கோட்டை…சிங்கம் என்ற கெளபாய் படத்தில். ஆமாம், அமெரிக்காவின் மேற்கிலிருந்து எப்போது கெளபாய்கள்- அதாவது மாடு மேய்ப்பவர்கள்- தமிழகத்திற்கு வந்தார்கள்?) முன்பெல்லாம் ஜெய்சங்கர், அசோகன் போன்ற நடிகர்கள் இம்மாதிரிக் கதைகளில் நடித்திருப்பர்.

இம்மாதிரியான வேடிக்கைப் பேராசைக் கதைகளுக்கெல்லாம் முன்னோடி புதையல் தீவு. ஆர். எல். ஸ்டீவன்சன் என்பார் எழுதிய கதை, பாய்மரக்கப்பல்கள், கடல்கொள்ளை காலப் பின்னணியில் நிகழ்வது. கேப்டன் ஃப்ளிண்ட் என்ற ‘தீய’ கொள்ளைக்காரன் புதைத்து வைத்த செல்வத்தைத் தேடுவதில் ஜிம் ஹாக்கின்ஸ் என்ற சிறுவன் ஈடுபட்டு வெற்றி பெறுவதைப் பற்றிய கதை.

ஜிம், ஒரு தங்குவிடுதிக்குச் சொந்தக்காரன். அதில் வந்து தங்குகின்ற பில்லி போன்ஸ் என்ற ஆள், ஒற்றைக்கால் மனிதன் ஒருவன் தென்பட்டால் எச்சரிக்கச் சொல்கிறான். இதற்குள்ளாக பிச்சைக்காரன் போன்ற ஒருவன் பில்லியிடம் ஒரு “கரும்புள்ளி” யைத் தருகிறான். கடற்கொள்ளைக்காரர் இடையே கரும்புள்ளி கிடைத்தால் உடனடி-மரணம் என்பது செய்தி. அவ்வாறே பில்லி போன்ஸ் இறக்கிறான்.

அப்பிச்சைக்காரன் திரும்பிவரும்முன், பில்லியின் பெட்டியில் ஒரு வரைபடம் கிடைக்கிறது. அதை எடுத்து ஜிம்மும் அவன் தாயும் பத்திரப் படுத்துகின்றனர். அதற்குள் கொள்ளைக்காரர் கும்பல் வந்து விடுதியைத் தாக்குகிறது. தொடர்ந்து சிப்பாய்கள் வர, மோதலில் பிச்சைக்காரன் இறக்கிறான், பிறர் ஓடிவிடுகின்றனர்.

இந்த மேப்பை, டிரெலானி துரை, டாக்டர் லிவ்ஸே என்ற நண்பர்களுக்கு ஜிம் காட்டுகிறான். கேப்டன் ஃப்ளிண்ட் புதைத்துவைத்த செல்வத்தின் இருப்பிடத்தை அது காட்டுகிறது. அதைத்தேடி டிரெலானியும் லிவ்ஸேயும் ஜிம்மும் புறப்படுகின்றனர். அதற்காக இஸ்பேனியோலா என்ற கப்பலை வாங்குகிறார்கள். இக்கப்பலின் தலைவர், கேப்டன் ஸ்மாலெட். கப்பலின் சமையல்காரனாக (தோளில் கிளியுடன்) ஓர் ஒற்றைக்கால் மனிதன்- அவன் பெயர் லாங்ஜான் சில்வர்- வந்து சேர்கிறான்.

அந்த ஒற்றைக்காலனும் கப்பலின் பிற மாலுமிகளும் உண்மையில் முன்பு ஃப்ளிண்ட்டிடம் வேலை செய்த கொள்ளைக்காரர்கள். புதையல் தீவை அடையும் நிலையில், அவர்கள் கப்பலிலுள்ள பிறரைக் கொன்றுவிட்டு தீவிலுள்ள “தங்கள்” செல்வத்தைப் பெற திட்டமிடுகின்றனர். இந்த திட்டத்தை ஜிம் ஒட்டுக்கேட்டு டிரெலானி, லிவ்ஸே ஆகியோரிடம் சொல்கிறான். கேப்டன் பெரும்பாலான கொள்ளைக்கார மாலுமிகளைத் தீவுக்குள் அனுப்பிவிடுகிறார். அவர்களுடன் சென்ற ஜிம், காட்டில் ஒளிந்து கொள்கிறான். அங்கு பென்-கன் என்பவனை சந்திக்கிறான்.

பென்-கன்னும் ஒரு பழைய கொள்ளைக்காரன்தான். அவன் சில ஆண்டு களுக்கு முன் அந்தத் தீவில் கைவிடப்பட்டவன். அவன் ஜிம்முக்கு உதவுவதாக வாக்களிக்கிறான். இடையில் ஜிம்மின் நண்பர்களும் கப்பலை விட்டு இறங்கித் தீவில் ஒரு மரவேலிப் பாதுகாப்பில் தங்குகின்றனர். தங்கள் ரகசியம் தெரிந்துவிட்டதென்று அறிந்த கொள்ளையர்களும் டிரெலானியிடம் உள்ள புதையல் மேப்பைக் கைப்பற்ற அவர்களைத் தாக்குகின்றனர். வேலிப் பாதுகாப்பு டிரெலானி குழுவினர்களுக்குப் புகலிடமாகிறது.

மறுநாள் ஜிம்மும் வந்து அவர்களுடன் சேர்ந்துகொள்கிறான். ஒற்றைக்கால் சில்வர், சமாதானம் பேச வருகிறான். படத்தைக் கொடுத்துவிட்டால் பத்திர மாக அவர்களை அனுப்பிவிடுவதாகச் சொல்கிறான். அதை டிரெலானி ஏற்காததால் மறுபடியும் சண்டை நிகழ்கிறது. இருபுறமும் சில மரணங்கள். ஸ்மாலெட்டுக்கு காயம்.

ஜிம் வேலிக் காப்பிலிருந்து தப்பி, பென்-கன் ஒளித்து வைத்திருந்த ஒரு படகின் உதவியால் தங்கள் கப்பலுக்கு வந்து, அதில் கடைசியாக இருந்த ஒரேஒரு கொள்ளைக்காரனைக் கொன்றுவிட்டு, தீவின் ஒரு மறைவான இடத்தில் கப்பலை நிறுத்திவிட்டு திரும்பவும் மரவேலிப் பாதுகாப்புக்கே வருகிறான்.

இப்போது காட்சி மாறியிருக்கிறது. அந்தக் காப்பிடத்தில் ஒற்றைக்கால் சில்வர்தான் இருக்கிறான். இடையில், படத்தையும் காப்பிடத்தையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டு ஜிம்மின் நண்பர்கள் சுதந்திரமாகச் சென்று விட்டனர்! ஜிம்மைத் தங்களுடன் சேருமாறு சில்வர் கேட்கிறான், ஆனால் ஜிம் மறுத்துவிடுகிறான். (சில்வருக்கும் ஜிம்முக்கும் இடையில் ஏதோ ஒரு இனந்தெரியாத நட்பு முதலிலிருந்தே இருக்கிறது.) மறுநாள் மேப்பை வைத்துப் புதையலைத் தேடலாமெனக் கொள்ளையர் முடிவு செய்கின்றனர்.

கடும் வெயிலில் மறுநாள் ஜிம்மையும் இழுத்துக்கொண்டு கொள்ளையர் புதையலைத் தேடிப் புறப்படுகின்றனர். ஆனால் குறிப்பிட்ட இடத்தை அடையும்போது அங்கு வெறும் காலிப்பெட்டி ஒன்றைத் தவிர வேறெதுவுமே இல்லை!

கொள்ளையர்கள் தன்னைத் தாக்குவார்கள் என்று எதிர்பார்க்கும் சில்வர், ஜிம்முக்கு ஒரு பிஸ்டலைத் தருகிறான். மற்ற கொள்ளையர் தாக்க முற்படும் வேளையில் அருகிலுள்ள காட்டிலிருந்து வேட்டுச் சத்தம் கேட்கிறது. ஒரு கொள்ளையன் இறக்கிறான். டாக்டரும் பென்-கன்னும் அவர்கள் முன் தோன்றுகின்றனர். கொள்ளையர்கள் தோல்வியுற்று ஓடுகின்றனர். அவர்கள் தங்கள் இலக்கைஅடையும் முன்பே ஜிம்மும் அவன் நண்பர்களும் அங்குச் சென்று படகை அழித்துவிடுகின்றனர்.

பென்-கன், சில ஆண்டுகள் முன்பே கொள்ளைப் பொருளைத் தோண்டி ஒரு குகையில் வைத்துவிட்டான்! எளிதாகப் புதையல் கிடைத்துவிட்டது. ஜிம்மும் டிரெலானியும் பிற நண்பர்களும் செல்வத்தை பென்-கன் குகையிலிருந்து கப்பலுக்குக் கொண்டு செல்கின்றனர். இடையில் லாங்ஜான் சில்வரும் அவர்களுக்கு உதவி செய்யும் சாக்கில் இணைந்து கொள்கிறான். மீதியிருக்கும் கொள்ளையர் சிலரைத் தீவிலேயே விட்டுவிட்டுப் பிற யாவரும் கப்பலுக்கு மாலுமிகளைத் தேடுவதற்காக அமெரிக்காவுக்குச் செல்கின்றனர். கொள்ளையடித்த செல்வத்தின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அங்கே ஒற்றைக்கால் சில்வர் மறைந்துவிடுகிறான்.

பிறர் இங்கிலாந்து திரும்பி சுகமாக வாழ்கின்றனர். பென்கன் இப்போது மரியாதைக்குரிய ஒரு குடிமகனாகிறான். ஜிம் இதற்குமேல் புதையல் எதையும் தேடுவதில்லை என முடிவு செய்கிறான். லாங்ஜான் சில்வரை அதற்குப் பின் கண்டவர்கள் ஒருவருமில்லை!

44 வயதில் மறைந்த ஆர். எல். ஸ்டீவன்சன் ஸ்காட்லந்து நாட்டினர். ஒரு புதையல் கற்பனைக் கதையாளர் மட்டுமல்ல அவர். தம்காலத்தில் மிகப்பெரிய, மிகப் புகழ்பெற்ற எழுத்தாளர், கவிஞர், சிறுகதையாளர், கட்டுரையாளர், நாடகாசிரியர், இலக்கியக் கொள்கையாளர், சிந்தனையாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். ஒரே மனிதர் எவ்விதம் பகலில் நல்லவராகவும் இரவில் தீயவராகவும் மாறுகிறார் என்ற கதை டாக்டர் ஜெகில் மற்றும் ஹைட் என்ற நாவலில் சித்திரிக்கப்படுகிறது. சிறந்த உளவியல் நாவலாக அது கருதப்படுகிறது.

இடைவிடாமல் எழுதிக் குவித்தவர். புதையல் தீவையும், ஜெகில் மற்றும் ஹைட் நாவலையும் தவிர, கடத்தப்பட்டவன் (கிட்னாப்ட்), கருப்பு அம்பு, சிறுவர்களின் கவிதைப் பூங்கா போன்ற பல பிரபல நூல்களையும் எழுதியுள்ளார்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
  2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
  3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
  4. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
  5. பரஜன் - க. பூரணச்சந்திரன்
  6. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
  7. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
  8. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
  9. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
  10. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
  11. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
  12. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
  13. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
  14. உடோபியா - க. பூரணச்சந்திரன்
  15. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
  16. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
  17. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
  18. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
  19. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
  20. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
  21. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
  22. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
  23. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
  24. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
  25. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
  26. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
  27. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
  28. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
  29. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
  30. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
  31. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
  32. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
  33. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
  34. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
  35. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
  36. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
  37.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
  38. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
  39. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
  40. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
  41. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
  42. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
  43. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
  44. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
  45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
  46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
  47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
  48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
  49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்