கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் 18

18 11/04/2020, சனிக்கிழமை

காலை மணி 10 : 30

கொரோனா தொற்றறிய உதவும் அதிவேகப் பரிசோதனைச் சாதனங்கள் தமிழகம் வந்தவுடன் அறுத்து தள்ளிடுவோம்ல்ல என்று தமிழக அரசு கூறியபோதெல்லாம் இப்படி எள்ளல் செய்ய நான் விரும்பியதில்லை !

ஒரு லட்சம் சாதனங்களை சீனாவில் ஆர்டர் செய்தாயிற்று, ஏப்ரல் ஒன்பது அன்று அவைகள் நம் கைகளில் கிட்டும்.  ஏப்ரல் பத்துக்குள் அது அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டு பரிசோதனைகள் தொடங்கிவிடும் என்று விஜயபாஸ்கர் முதல், பீலா, எடப்பாடி, சண்முகம் வரை சொல்லிவிட்டார்கள், ஆனால் இன்றுவரை அவைகள் ஏதும் இந்திய எல்லைக்குள் கூட வரவில்லை.  ஏன், அவைகளை அனுப்பிவிட்டதாக சீன நிறுவனம் உறுதியும் கொடுக்கவில்லை.  இவைகளையெல்லாம் நமக்குச் சொல்வதும் மேற்கண்டோரே !

இப்ப எள்ளல் தாமே வருமா இல்லையா ?

இம்மாதிரியான பேரிடர்ச் சூழலிலும் மலிவான அரசியலை யார் செய்கிறார்கள், நாமா ?  மாநில அரசு தங்களிஷ்டத்துக்கு மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்து தருவிக்க வேண்டாம்.  நடுவண் அரசிடம் முறையிடுங்கள், அவர்களே தருவித்து பகிர்ந்தளிப்பார்கள் என ஒரு சுற்றறிக்கையை விட்டிருக்கும் மோடியின் நடுவண் அரசுதான், தாமே அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்துக்கொள்ளும் கேவலமான அரசியலைக் கையிலெடுத்திருக்கிறது !

மாநிலத்திற்கென இருக்கும் சுயாட்சி உரிமையில், ஒட்டகம் கூடாரத்தினுள் நுழைந்த கதையாக மூக்கை விடுவார்களெனில், அதுவும் நாடு கடும் நெருக்கடியிலிருக்கும் இந்தச் சூழலில் ?  இதற்கு அவர்களும், அவர்களுக்கு ஓயாமல் ஜால்ரா அடிப்பவர்களுமல்லவா வெட்கப்பட வேண்டும் ?  வெட்கம், மானம் என்பது அவர்கள் கேள்விப்படாத வார்த்தைகளோ என்னமோ ?

பிற்பகல் மணி 02 : 30

நமக்கு வந்திருக்க வேண்டிய ராபிட் டெஸ்ட் கிட்கள் வராமல் போனதற்கு மோடி ஒரு காரணமாக இருக்குமோ என ஐயப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், 100 மோடிகள் சேர்ந்த மொத்த உருவமான ட்ரம்பும் சந்தேகத்திற்க்குள்ளாக்கப் பட்டுக் கொண்டிருந்தார் !

அப்போதுதான் அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 ற்கும் மேற்பட்டோர், கொரோனா தொற்றால் இறந்து போனது குறித்த சேதி வந்திருந்தது.  எந்த நாட்டிலும், இதுவரை இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழவேயில்லை.   உலகின் முதல் வல்லரசு நாட்டுக்கே இதுதான் கதி என்பதை நாம் கவலையுடன் அணுக வேண்டிய அதே நேரத்தில், நோய் தீவிரத்தைக் கட்டுப்படுத்த மருந்துக்காகவும், தற்காப்பு உபகரணங்களுக்காகவும், சேதனைச் சாதனங்களுக்காகவும், அமெரிக்கர்கள் எவ்வளவு கீழ்த்தரமான வேலைகளைச் செய்யத் துணிந்துவிட்டனர் என்பதும் புரிய வந்தது !

ஜெர்மனிக்குப் போக வேண்டிய முகமூடிகளை வழியிலேயே மறித்து, அதிக மேல்விலைக்கு அதைக் கைப்பற்றிக் கொண்டு போயிருக்கிறார்கள்.  பல நாடுகளுக்கும் போய்க் கொண்டிருந்த ஆண்ட்டிபயாடிக் மருந்துகளுக்கும் இதே கதி நேர்ந்தது.  உள் நாட்டுத் தேவைக்காக உயிர்காக்கும் மருந்துகளுக்கு நாம் ஏற்றுமதி செய்யத் தடை விதித்திருந்தால் அதையும் ப்ளாக்மெய்ல் செய்து தகர்த்து, நம் தேவையைப் பற்றி அக்கறைகொள்ளாமல் ஏற்றுமதியை அனுமதிக்கச் செய்தனர் !

அதேகதிதான் தமிழகத்திற்கு வரவேண்டிய ஒரு லட்சம் Rapid Test Kits களுக்கும் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.  நாம் கொடுத்த விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிக விலையை நிர்ணயம் செய்து, அதைத் தட்டிப் பறித்திருக்கக் கூடும்.  அப்படி ஆகியிருந்தால், அதற்கான முழுத் தோல்விப் பொறுப்பும் நடுவண் அரசுக்குரியதே !

மாலை மணி 06 : 00

என் வீட்டுக்கருகில் CSI ரெய்னி என்கிற பழம்பெருமை வாய்ந்த ஒரு மருத்துவமனை உண்டு.  குறைந்த கட்டணத்தில் மருத்துவச் சேவை புரியும் கிருத்துவ மத அறக்கட்டளையைச் சார்ந்த மருத்துவமனை.  ஒருகாலத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு நிகராக பல லட்சக்கணக்கான பாதுகாப்பான பிரசவங்கள் நிகழ்ந்த மருத்துவமனை.  அங்கு பணிபுரியும் ஒரு செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், நேற்று திடுக்கென அங்கு ஒரு பிரளயம் நிகழ்ந்தது !

அந்தச் செவிலியரின் தந்தைக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  அதனால் அந்தச் செவிலியருக்கும் சோதனையை மேற்கொண்ட போது இந்த விபரீதம்.  இவர் தொடர்ந்து பணிக்கு வந்து சென்றதால், ரெய்னி மருத்துவமனை முழுக்க ஒரு சில மணி நேரங்கள் சீல் செய்யப்பட்டது.  கிருமிநாசினி முழுக்கத் தெளிக்கப் பட்டபின், மருத்துவமனை வளாகத்திலிருந்த அனைவருக்கும் சோதனைகளைச் செய்து, தனிமையில் இருக்க அறிவுறத்தப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் !

இத்தாலியில் 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனா தொற்றில் பலியானச் சேதி சொல்லொண்ணா துயரத்தைத் தந்தது.  நம் நாட்டிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த வைரஸ் தொற்று பரவும் சேதி பீதியடையச் செய்கிறது.  அரசு, இவர்களுக்கு முறையான பாதுகாப்புச் சாதனங்களுடன், கோடிக் கணக்கில் இன்சூரன்ஸ், உயரிய கவனிப்புகளை நல்க வேண்டும் !

 

தொடரும்

 

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  29. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  30. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  31. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்