கொரோனா வீட்டுச்சிறை நாட்கள்  நாள் # 49

12/05/2020, செவ்வாய் நண்பகல் மணி 12 : 00

வந்தேபாரத் மிஸன் என்பது (இந்தியாவை வணங்குவோம் திட்டம்) அன்னிய நாடுகளில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களில், இந்தியாவுக்கு போக விரும்புவர்களை அழைத்து வரும் திட்டம்.  அதன்படி இந்திய விமானங்கள், இந்திய கடற்படையின் போர் கப்பல்கள் மூலமாகவும் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவார்கள்.  இந்திய அரசின் போர் கப்பல் மாலத்தீவிலிருந்து பல ஆயிரம் மக்களை மீட்டு வந்தது.  அதேபோல வளைகுடா நாடுகளான குவைத், ஓமன் போன்ற நாடுகளிலிருந்தும் தன் மக்களை விமானங்கள் மூலமாக இந்திய அரசு மீட்டு வந்தது.  அப்படி இன்று காலை கத்தாரிலிருந்து இந்தியர்களை அழைத்துக் கொண்டு வர, அங்கு போன இந்திய விமானத்தை தரையில் இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது கத்தார் அரசு !

கத்தார் அரசு மீது சங்கிகளைப் போல் கோபம் கொள்ளாமல் நடந்தது என்ன எனப் பார்ப்போம்.

” தாய்நாட்டுக்கு வரத்துடிக்கும் தங்கள் நாட்டு குடிமகன்களை மீட்கவே விமானங்களை அனுப்புகிறோம் என்றீர்கள்.  மீட்க வரும் விமானம் என்றதால் நாங்களும் விமான நிலைய நுழைவுக்கட்டணம், வாடகை, பயணத் தொகைக்காக வரி போன்ற அனைத்துச் செலவினங்களையும் ரத்து செய்து சலுகைகளாக விட்டுக்கொடுத்தோம்.  பிறகு விசாரித்தால், இன்று பயணப்படவிருந்த ஒவ்வொரு பயணியிடமிருந்தும் 700 ரியால்கள் வரை (இந்திய ரூபாய் மதிப்பில் 15000) பயணக் கட்டணமாக நீங்கள் வசூல் செய்திருக்கிறீர்கள்.  தங்கள் நாட்டு குடிமகன்களை மீட்க வரும் எந்த நாடும் இப்படி கட்டணம் வசூலிக்காது என நம்பித்தான், பயணிகளுக்கு மேலும் சலுகைகள் அளிக்க விரும்பி, செலவுகளை தள்ளுபடி செய்தோம்.  வணிக நோக்கில் செயல்படும் எந்த விமானங்களையும் இந்தக் கொரோனா கால விதிப்படி நாங்கள் அனுமதிக்க இயலாது, செலவு செய்துதான் அவர்கள் வர வேண்டுமெனில் அதற்கு எங்கள் விமானங்களே எத்தனையோ சும்மாத்தானே இருக்கின்றன ?  நீங்கள்தான் அவைகளை இறங்க உங்கள் நாட்டில் அனுமதிப்பதே இல்லையே ?? “

நம்முடைய வந்தே பாரத்தின் லட்சணம் இது.  இன்று கிளம்பிய வந்தே பாரத் ரயில்களின் கட்டணங்களையும் கேள்விப்பட்டிருப்பீர்களே ?  சாதாக் கட்டணங்களைக் காட்டிலும் ஐந்திலிருந்து ஆறு மடங்கு அதிகம்.  பணக்காரனாயிருந்தால் நீ என் குடிமகன்.  பணமில்லையா ?  கால் இருக்குல்ல ? நடந்து போ.  வெளிநாடா இருந்தா உன் முறை வரும் வரை காத்திரு.  காலம் ஒரு மாதத்திற்குள்ளும் வரலாம், ஒரு சில வருடங்களுக்குள்ளும் வரலாம்.  அதற்குள் பணம் சேர்த்துவிடு !

கத்தார் விமான நிலையத்தில் ஏமாந்துபோய் தவித்த இந்தியர்களை கத்தார் அரசு முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டு, அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் தற்காலிகமாக ஆனால் சிறப்பாகச் செய்து கொடுத்திருக்கிறது !

மாலை மணி 03 : 30

இன்று இரவு எட்டுமணிக்கு பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாற்றவிருக்கிறார் என்கிற சேதி ஓடியதைப் பார்த்ததுமே கெதக்கென்று ஆனது !

ஆஹா, மனுஷன் இன்னிக்கு என்ன அணுகுண்டு, இன்னிக்கு என்ன டாஸ்க்கச் சொல்லப் போறாரோ என்று மனம் தத்தளிக்கத் தொடங்கியது.  அப்பப் பார்த்துதான் பத்தாவது வகுப்புக்கான இறுதித்தேர்வு அடுத்தமாத முதல் தேதியில் 01/06/2020 தொடங்கும் என்கிற கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பு வந்ததைப் பார்த்தேன் !

மாலை மணி 07 : 00

பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வுக்கு எந்த அவசியமுமில்லை, அவர்கள் அனைவரையும் தேர்ச்சி செய்து, மேல் வகுப்புகளுக்கு அனுப்பி விடலாம் என்று பல கல்வியாளர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.  அவர்களுடைய காலாண்டு, அரையாண்டு, பயிற்சிக்கான மாதிரி தேர்வுகளின் மதிப்பெண்களைக் கூட அளவீடாகக் கொண்டு, அவர்களுக்கு பதினோரம் வகுப்பில், பாடப்பிரிவுகளை ஒதுக்க முடியும் என்றும் ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் !

ஆனால் ஏனோ நடுவண் அரசும், மாநில அரசும் இந்தத் தேர்வுகளை எப்படியாகிலும் நடத்தியே தீர்வது என்று விரைப்பாக நிற்கிறார்கள்.  பல லட்ச மாணவர்கள், பல்லாயிரக் கணக்கில் ஆசிரியர்கள், பல்லாயிரக் கணக்கில் இதர கல்வித்துறை அலுவலர்கள், இந்த பெருந்தொற்று நோய் காலத்தில் இப்படி கூடுவது பேராபத்து என்பது அரசுகளுக்குத் தெரியாதா என்ன ?  இன்னொரு கொடூரம் கடந்த இரண்டு மாதங்களாக அலைக்கழிப்பில், குடும்பச்ச்சூழலில், மாணவர்களின் நிலை என்ன கதியிலிருக்கும் ?  தனியார் பள்ளிகளில் வசதியான மாணவர்கள் காணொளி மூலம் கொஞ்சம் பாடங்களோடு நெருக்கமாக இருக்க முடிந்தது, பிறர் நிலை ?  அதிலும் கிராமப்புற மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களின் நிலை ?

நீட் என்ற ஒரு விஷக்கத்தி கொண்டு மாணவர்களை எப்படி கழித்துக் கட்டி அறுத்து விடுகிறார்களோ, அப்படியே இந்தப் பொதுதேர்விலும் வடிகட்டியே ஆகவேண்டுமென பிடிவாதம் பிடிக்கிறார்கள்.  வழக்கம்போல சூட்டோடு சூட்டாக அரசின் இந்த முடிவையும் கடுமையாகச் சாடியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்

இரவு மணி 08 : 00

சாத்தியோங் என ஆரம்பித்தார் நமக்கு வாய்த்த பிரதமர்.  வள வளா கொழ கொழா ரகப் பேச்சுதான் அவருடையது.  ஆனால் இது வெட்டிப் பேச்சுதான் எனப் புரியவே அவருடைய ரசிகர்களுக்கு இன்னும் நூறாண்டுகள் தேவைப்படும் .

அவசரக்காலத் தேவைகளுக்காக உருவாகும் உள்நாட்டு உற்பத்திகளைக் கூட தன் சாதனைகளாக சொல்லிக்கொள்ளும் அல்பையைப் பெற்றிருக்கிறோம்.  இன்றைய உள் நாட்டுத் தேவையான PPE & N 95 கிட்கள் தினமும் இரண்டு லட்ச அளவுக்கு உயர்ந்திருக்கிறதாம்.  இதில் இவருக்கு என்ன பங்கிருக்கிறது ?  இந்தப் பொருட்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மீதான வரித்தளர்வு, பொருட்களுக்கு மீதான GST விலக்கு, போக்குவரத்து செலவு இலவசம் என அறிவித்திருக்கிறாரா என்ன ?  தேடிப்பாருங்கள், எதுவுமே இருக்காது.  பிறகு டிமாண்டுக்கான உற்பத்தி மீது இவர் ஏன் க்ரெடிட் எடுத்துக் கொள்கிறார் ?  வெறும் கையால் முழம் போட்டால் எத்தனை முழமும் போடலாம்தானே ?  போக அதை விலையில்லாமல் கூட விற்கலாம் அல்லவா ?  அதே கதைதான் அவர் விட்ட 20 லட்சம் கோடிகளுக்கான பேக்கேஜ் கதையும்.  நாளை (13/05/2020) அதுபற்றி நிதி அமைச்சர் நிர்மலா விளக்கவிருக்கிறாராம்.  ரணகள விவாதங்களை அது உண்டாக்கும்.  இதில் அந்தம்மா 20 லட்சம் பேக்கேஜ் என்று கோடிகளை அம்போவென விட்டுவிட்டு ட்வீட் போட, ஆஹா ஆரம்பமே ஜோரா இருக்கே மினிஸ்டர்ஜி என பொறித்தெடுத்து விட்டார்கள் நெட்டிசன்கள் !!!

தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  4. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  5. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  6. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  7. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  8. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  9. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  10. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  11. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  12. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  13. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  14. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  15. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  16. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  17. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  18. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  19. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்