கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 26
19/04/2020, ஞாயிறு மணி 11 : 00
நேற்றிரவு இளையராஜா வழங்கிய எம் எஸ் விக்கான இதயப்பூர்வமான கீதாஞ்சலியின் மறு ஒளிபரப்பை ரசித்து, பின் படுக்கைக்குச் சென்றதில், நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வாய்த்தது !
பார்ப்பனச் சங்கீதமும், சமஸ்கிருத வார்த்தைகளுடனான பாடல்களும், இழுவை ராகங்களுமாயிருந்த தமிழ்ச் சினிமா பாடல்களை, அழகுத் தமிழ் வரிகளாகவும், வரிகள் புரியுமளவு அதற்கேற்ப இனிய மெல்லிசையையும் அளித்த விதத்தில், எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள்தான் இனிய திரைப்படப் பாடல்களின் முதல் சிற்பி !
அதுவரை குறிப்பிட்ட வெகு சிலருக்கு மட்டுமே புரிந்த பாடல்கள், முதன் முதலாக பட்டித்தொட்டியெங்கும் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்திருக்கிறது. பொழுது போக்கவும், தங்களின் இன்ப துன்பங்களைப் பாடி வடிகால்களாக்கிக் கொள்ளவும் அவர்களுக்கு மெல்லிசை மன்னர் அமைத்த மெட்டுக்கள் உதவியிருக்கின்றன !
எம். எஸ். விஸ்வநாதனின் சாம்ராஜ்யம், இளையராஜாவால்தான் குலைந்தது. ஆனால் இதை ஒருபோதும் இருவருமே என்றும் எங்கும் சொன்னதில்லை. இளையராஜா உச்சத்திற்கு போய்க்கொண்டிருந்த வேளையிலும் எம் எஸ் வியின் அதி சிறப்புமிக்க புகழ்பெற்ற பாடல்கள் வந்து கொண்டுதானிருந்தன. எடுத்துக்காட்டாக மரோ சரித்ரா, பில்லா, தில்லுமுல்லு, அந்த ஏழு நாட்கள், நினைத்தாலே இனிக்கும், வறுமையின் நிறம் சிவப்பு….
85 களுக்குப் பின் ராஜா விஸ்வரூபமெடுக்க, எம் எஸ் வி ஓய்வு நிலைக்குப் போய்விட்டார். ஆனாலும் ராஜாவுக்கு அது பொறுக்கவில்லை. அவரை அழைத்து மெல்லத் திறந்தது கதவு படத்துக்கு இசைக்க வாய்ப்பளித்தார். இருவரும் சேர்ந்ததால் அந்தப் பட இசையும், பாடல்களும் அழியாப் புகழ் பெற்றன.
சொல்ல வருவது, தன்னால் இயன்றவரை எம் எஸ் விஸ்வநாதனை தாங்கிப் பிடித்துக் கொண்டார் இளையராஜா. இளையராஜா அளவு காப்பிரைட் விஷயத்தில் மெல்லிசை மன்னர் கில்லி இல்லை. ராஜாவைப் போல் கறாராகவும் அவருக்கு நடந்துக் கொள்ளத் தெரியாத சுபாவம். அந்திம காலங்களிலும் மெகா டிவி போன்றவற்றில் நிகழ்ச்சிகள் செய்துக் கொண்டிருந்தாலும், ஏனோ திரையுலகம் அவரை அறவே நிராகரித்திருந்தது !
95 களுக்குப் பிறகு ராஜாவுக்கே இந்த நிலை வந்தபோதும், அவரால் வலுவாகத் தாக்கு பிடிக்க முடிந்ததற்கு அவருடைய பணபலம் பெரிதும் உதவியது. பாலுமகேந்திரா, பாலா, மிஷ்கின், அவ்வப்போது கமல் மட்டுமே ராஜாவைத் தேடிச் சென்றனர். இருந்தாலும் அவருடைய கெத்து, இன்றளவும் அவரை ராஜாவாகவே வைத்திருக்கிறது !
இன்றளவும் தன் குழுவுடன் உலகம் முழுக்க கச்சேரி நடத்த அவர் சுற்றிக்கொண்டே இருக்கிறார். அந்தளவு அவர் பாடல்களை, அவருடைய இசையை ரசிக்க பெரிய டிமாண்ட் உள்ளது. இருந்தும்,
இந்த 2020 லும் அவர் இசைத்த படப் பாடல்தான் மெஹா ஹிட் !
தன் குருவுக்கான நினைவஞ்சலியை கீதாஞ்சலியாய் அவர் 2015 ஜூலை 27 அன்று காமராஜர் அரங்கில் செலுத்தினார். அந்த ஒளிபரப்பைத்தான் கொரோனா ஊரடங்குக்காக மறு ஒளிபரப்பு செய்தது சன் டிவி !
எம் எஸ் வி பற்றிய நினைவுகளையும், வரலாற்றையும், சம்பவங்களையும் சொல்லிக்கொண்டே, இளையராஜா தான் தேர்ந்தெடுத்த மெல்லிசை மன்னரின் பழைய பாடல்களை பாடவைத்து இசைத்தது, ஆனந்தக் கண்ணீரைப் பெருக்கியது !
நம் வாழ்நாளில் இந்த இசை மேதைகளுடன் வாழ்ந்தோம் என்பதே கொடுப்பினை ! இவர்களால் கொரோனாவின் பிற சேதிகளுக்கு கூட இன்றைய ஞாயிறு காத்திருக்கவில்லை !
இரவு மணி 10 : 00
நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும், கணிசமாக அதன் கட்டணத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்கிற சேதி காதுகளில் கடப்பாரையை விட்டு ஆட்டியது போல் துன்பத்தையும், எரிச்சலையும் தந்தது ! இந்தக் கேடுகெட்ட ஆட்சியாளர்களுக்கெல்லாம் மனசாட்சி என்கிற ஒன்று இருக்குமா – இல்லையா ?
முடிவாக வந்த இன்னொரு கேவலமான சேதி, இன்றும் 50 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று பாசிட்டிவ் கேஸ்கள் தமிழகத்தில். இன்றோடு கொரோனா எங்கோ ஓடிப்போகும் எனச் சொன்ன எடப்பாடியும், அவருடைய அடிப்பொடிகள்தான் பேட்டி கூட கொடுக்காமல் காணாமல் போயிருந்தனர் !!!
தொடரும்